பத்து படங்களில் நடித்தாலும் கிடைக்காத பெருமை முதல் படத்தில் மட்டுமில்லாமல் இரண்டாவது படத்திலும் கிடைத்திருக்கிறது நாயகி ரம்யா பாண்டியனுக்கு!
ராஜு முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தில் கேரக்டருக்கேற்ற பொருத்தமாக முகமாக அமைந்து போனவர் நடிகை ரம்யா பாண்டியன்.
இதற்கு முன்பு ஒன்றிரண்டு படங்களில் தலை காட்டியிருந்தாலும் ’ஜோக்கர்’ தான் என்னுடைய முதல் படம் என்று சொல்லுகிற அளவுக்கு படத்தில் இயல்பான நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் ஊடகங்கங்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களிடமும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ‘ஜோக்கர்’ திரைப்படம் ரம்யா பாண்டியன் சினிமா கேரியருக்கு திருப்புமுனை படமாக அமைந்திருக்கிறது.
ஆமாம், ‘ஜோக்கர்’ ரிலீசான கையோடு இப்போது இரண்டாவது படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ரம்யா பாண்டியன்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘அப்பா’ திரைப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்படத்தின் நாயகனும், இயக்குநருமான சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கும் பெருமையைஇரண்டாவது படத்திலேயே பெற்றிருக்கிறார் ரம்யா பாண்டியன்.
‘ரெட்டைச் சுழி’ பட இயக்குநர் தாமிரா இயக்கத்தில் தயாராகும் ‘ஆண் தேவதை’ படத்தில் தான் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகியிருக்கிறார்.
இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.
ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்கிறது என்பதையும் படம் உணர வைக்கும் படமாக இயக்கப் போகும் தாமிரா தனது குருநாதர் ‘இயக்குநர் சிகரம்’ பாலச்சந்தரிடம் கொண்ட அன்பின், மதிப்பின் அடையாளமாக அவரது நினைவாக ‘சிகரம் சினிமாஸ்’ என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து ஃபக்ருதீனுடன் இணைந்து படத்தைத் தயாரிக்கிறார்.
குருவின் ஆசியோடு வெற்றி கிடைக்கட்டும்!