சண்முக பாண்டியனின் எளிமை! – நேரில் பார்த்து அசந்து போன ‘மதுர வீரன்’ நாயகி

‘சகாப்தம்’ படத்தைத் தொடர்ந்து விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘மதுர வீரன்.’

பி.ஜி முத்தையா இயக்கத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாகக் கொண்டு தயாராகியிருக்கும் இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் மீனாட்சி.

கேரள வரவான மீனாட்சி தமிழில் தனது முதல் அறிமுகம் குறித்தும், படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் குறித்தும் பகிர்ந்து கொண்டார்…

”நடிப்பை பற்றி பெரிதாக புரிதல் இல்லாத குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் நான். என்னை ‘மதுர வீரன்’ திரைப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்த இயக்குனர் பி.ஜி முத்தையாவுக்கு நன்றி. அவர்  படப்பிடிப்பில் தளத்தில் எனக்கு பெரிதும் உதவினார். அவர் மிகவும் நல்ல மனிதர். எப்போதும் முகத்தில் புன்னகையுடன் இருப்பார்.

படப்பிடிப்பு தளத்துக்கு வரக்கூடிய முதல் நபரும் அவர் தான். அவருடைய உண்மையான உழைப்பும், அமைதியும் அனைவருக்கும் புத்துணர்ச்சியை தரும். அவர் படத்தின் ஒளிப்பதிவாளரா அல்லது இயக்குநரா? என்ற சந்தேகம் எனக்கு பலமுறை வந்துள்ளது. பன்முக திறமை கொண்டவர் அவர். அவரோடு இப்படத்தில் பணியாற்றியது சிறப்பாக இருந்தது.

என்றவர் நாயகன் சண்முக பாண்டியன் எளிமையானவர், மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தாலும் எப்போதும் எல்லோரிடமும் சாதரணமாக பழகுபவர். அவர் மிகவும் நேர்மையானவர். படப்பிடிப்பில் வசனங்களை சரியாக பேச எனக்கு உதவியவர் அவர் தான். என்னுடைய வாழ்க்கையில் மிகசிறந்த தருணம் விஜயகாந்த் அவர்களும் பிரேமலதா அவர்களும் படபிடிப்பு தளத்துக்கு வந்து என்னுடன் ஒரு மணி நேரம் பேசியது தான். என்னுடைய வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது எனலாம்.

என்னுடைய சொந்த ஊர் ஆலப்புழா, தமிழகத்தின் பசுமையான கிராமங்கள் என்னை அழகாக்கி, நிறைய கற்று தந்துள்ளது. கிராமத்து பெண்கள் சேலை அணிவதில் ஆரம்பித்து பலவற்றை எனக்கு கற்றுதந்துள்ளனர். கிராமத்து பெண்கள் சேலை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். மதுரவீரன் படத்தின் படபிடிப்பில் அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.

நான் தமிழகத்தின் சிறப்பான தித்திக்கும் பொங்கலுக்கு மிகப்பெரிய ரசிகை. ஆனால் படபிடிப்பின் போது அதை நான் அதிகம் சாப்பிடவில்லை” என்றார் மீனாட்சி.

Madura VeeranMeenakshiShanmuga Pandian
Comments (0)
Add Comment