தமிழ்சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பேய்ப் பட சீசன் இப்போது தான் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்திருக்கிறது.
இருந்தாலும் அவ்வப்போது சில பேய்ப்படங்கள் வந்து ரசிகர்களை மிரட்டிச் செல்வதோடு மட்டுமில்லாமல் மிரட்டலான வசூலையும் அள்ளிச் சென்று விடும்.
அந்த வகையில் ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் தாமரை கண்ணன் இயக்கத்தில் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், சம்பத், ஆடுகளம் நரேன், ஓம்புரி மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வர இருக்கும் திரைப்படம் தான் ‘செண்பக கோட்டை’.
மலையாளத்தில் ‘ஆடு புலி ஆட்டம்’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் தான் தமிழில் ”செண்பக கோட்டை”யாக ரீமேக் ஆகிறது.
“ இது பேய்ப்படம் போல் இருந்தாலும் வழக்கமான பேய்ப்படமாக இருக்காது. வரலாற்றுக் காலத்தில் நடக்கும் ஒரு கதை, 20 வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஒரு கதை, தற்போது நடக்கும் ஒரு கதை என மூன்று காலகட்டங்களில் இந்தப் படத்தின் கதை நகரும்.
வரலாற்றுக் காலத்தில் பராந்தக சோழன் என்ற மன்னன், ஒரு மலைவாழ் பெண் மீது காதல் கொண்டு அவரைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அவளுக்காக ஒரு பெரிய மாளிகையை கட்டிக் கொடுக்கிறான்.
போர்க்காலம் வந்த போது மன்னனின் உயிரைக் காப்பாற்ற, தன் உயிரைக் கொடுத்து மரணிக்கிறாள் அந்தப் பெண்.
பல நூறாண்டுகள் கடந்தும் அவளது ஆவி அங்கேயே இருக்கிறது. அதை மையமாக வைத்து இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஹீரோவாகப் பார்த்த ஜெயராம் இதுவரை வில்லன் கேரக்டரில் நடித்ததில்லை. அப்படிப்பட்டவர் இந்தப் படத்தில் ஒரு கொடுமைக்கார வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். ரசிகர்களுக்கு கண்டிப்பாக அது புதுசாக இருக்கும். ரம்யாகிருஷ்ணன் அம்மன் பக்தையாக நடித்துள்ளார்.
இவர்கள் இரண்டு பேர்களைத் தவிர்த்து படத்தில் பேசப்படுவது பேபி அக்ஷரா கிஷோர், பேபி அஞ்சலீனா என்ற இரண்டு சிறுமிகள் தான். அவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் என்றார் இயக்குநர் தாமரை கண்ணன்.
பொதுவாக பேய்ப்படங்களில் செண்டிமெண்ட் இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் அந்த செண்டிமெண்ட் நெறையவே இருக்கும். ரசிகர்களை அது கவரும் விதமாக இதுவரை பார்த்திருக்காத அளவிற்கு ஒரு பேய்ப் படமாக இந்தப் படம் இருக்கும் என்றார் தமிழுக்காக இப்படத்தில் வசனம் எழுதியிருக்கும் சித்ரா லட்சுமணன்.