சிம்புவுக்கு நல்ல நேரம் என்பதே சில நாட்கள் அல்லது சில வாரங்கள் தான் போலிருக்கிறது. மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது.
சமீபகாலமாகத்தான் ‘இது நம்ம ஆளு’ பட வெற்றியின் பூரிப்பில் இருந்தார் சிம்பு. அந்த உற்சாகத்தில் அவருக்கு வீட்டில் பெண் பார்க்கும் வேலையெல்லாம் நடந்து வருகிறது என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் அந்த சந்தோஷமான தருணங்கள் இதோ சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை.
கெளதம் மேனன் உருவில் சிம்பு மீது புதுப்பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது.
சிம்புவை வைத்து குறிப்பிட்ட தேதிக்குள் எடுக்க நினைத்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்குநர் பாண்டிராஜைப் போல பல மாதங்களாக எடுத்து வருகிறார் கெளதம் மேனன்.
ஒரு வழியாக சிம்புவின் டார்ச்சர்களுக்கு மத்தியில் படத்தின் 95 சதவீதம் எடுத்து முடித்த கெளதம் படம் ஜூலை 15-ம் தேதி ரிலீசாகும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் இப்போது சிம்புவின் முந்தைய படங்கள் ரிலீஸ் தள்ளிப்போனது போலவே இந்தப்படமும் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.
ஆமாம் படத்தில் இடம்பெறும் என்று சிம்பு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ”தள்ளிப் போகாதே” பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படவில்லை. பணம் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்தில் சிம்பு – கெளதம்மேனன் இருவருக்குமிடையே ஏற்பட்ட லடாய் காரணமாம்.
இதை கெளதம் மேனனே வெளிப்படையாக ஒப்புக்கொண்டாலும் சிம்பு படப்பிடிப்புக்கு வராததுக்கு கெளதம்மேனன் பணம் பாக்கி வைத்திருப்பது தான் காரணம் என்கிறார் சிம்புவின் அப்பா டி.ஆர்.
ஆக இருவரின் கோபமும் முழுவதுமாக தணிய ஒருமாத காலம் ஆகும் என்பதால் பட ரிலீசும் இன்னும் இரண்டு மாதங்கள் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.
இந்தப்படம் தள்ளிப்போனால் சிம்புவின் அடுத்த படமான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பும், ரிலீசும் தள்ளிப்போக வாய்ப்பிருக்கும் என்கிறார்கள். இதனால் எங்கே கெளதம் மேனன் நிலை நமக்கும் வந்து விடுமோ? என்கிற கலவரத்தில் இருக்கிறாராம் அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
சிம்புவுக்கு எப்பவும் ஒரே ‘டிசைன்’ தான் போலிருக்கு!