சினிமா உலகம் அப்படித்தான். யார் கீழே விழுந்தாலும் அவர்களை தூக்கி விட அல்ல, ஆறுதல் சொல்லக் கூட யாரும் முன் வர மாட்டார்கள்.
அப்படியும் சிலர் வந்தால் அவர்கள் வந்ததும் தெரியாது, போவதும் தெரியாது என்கிற ரேஞ்சில் தான் வந்து போவார்கள்.
”என்னை நிம்மதியா வேலை செய்ய விடுங்க…” என்று ரெமோ வெற்றி விழாவில் மேடையிலேயே அழுதார் சிவகார்த்திகேயன்.
அந்த நிமிடம் முதல் சிவகார்த்திகேயன் கண்ணீருக்கு காரணம் யாராக இருக்கும்? என்று ஆளாளுக்கு விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள்.
குறுகிய காலத்தில் தொடர் வெற்றிகளைக் கொடுத்து வருவதால் சிவகார்த்திகேயன் மீது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஆத்திரம் இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இப்படி ஆளாளுக்கு சிவகார்த்திகேயனை அழ வைத்தது யாராக இருக்கும்? அல்லது எத்தனை பேராக இருக்கும்? என்று பேசிக்கொண்டாலும் முதல் ஆளாக ஆறுதல் சொல்லி சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகர் சிம்பு.
கவலைப்படாதே சிவா, உனக்கு மட்டும் இல்லை, அவங்க யாருன்னு எனக்கும் தெரியும், அவங்க அதுலேயும் சிறந்தவங்க. கடின உழைப்பு தான் வெற்றியைத் தரும். மிச்சத்தை கடவுள்கிட்ட கொடுத்து விடு. தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அவர். ட்விட்டரில் கருத்து தெரிவித்ததோடு விட்டு விடாமல் உடனடியாக சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டும் பேசியிருக்கிறார்.
சபாஷ் சிம்பு!