இன்னும் கட்சியே ஆரம்பிக்கல.. – அதுக்குள்ள ஏன் ரஜினிக்கு இந்த வேண்டாத வேலை?

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 4000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏராளமானோர் போராட்டம் நடத்தியதால் போராட்டக்காரர்கள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரும் காவல்துறையினரை தாக்கினர். இதில் காவல்துறையினர் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் மட்டும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், ”வன்முறையின் உச்ச கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்தைப் பார்த்ததும் கொந்தளித்து விட்டார்கள் நெட்டிஷன்கள்.

”ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற போது வராத கோபம்”

”கர்நாடகாவில் அப்பாவி தமிழ்மக்களை அடித்து விரட்டிய போது வராத கோபம்”

”ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும் வன்முறையை காவல்துறை கட்டவிழ்த்து விட்டபோது வராத கோபம்”

”போக்குவரத்து காவலர் எட்டி உதைத்ததில் இளம்பெண் உஷா உயிரிழந்தபோது வராத கோபம்”

”நடுத்தர வயதுள்ள பெண்மணி ஒருவரை காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்த போது வராத கோபம்”

ஏன் இப்போது மட்டும் வந்தது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் மீது போலீஸ் காட்டுமிராண்டித் தனமாக தடியடி நடத்தும்போது நீங்கள் ஏன் மவுனமாக இருந்தீர்கள் ரஜினி? என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுவாக ஒருவர் அரசியலுக்கு வரும் போது மக்களின் ஆதரவு வேண்டும் என்று தான் வருவார்கள். ஆனால் ரஜினியோ இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள்ளாகவே காவல்துறையால் அதிகமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக இல்லாமல் கருத்து தெரிவிப்பதைப் பார்க்கும் போது அவராக விருப்பப்பட்டு அரசியலுக்கு வரவில்லை. அவரை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்? என்றும் பலத்தை சந்தேகத்தை எழுப்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

IPL Cricket Matchrajinirajini tweetRajinikanth
Comments (0)
Add Comment