பாண்டிராஜ் இயக்கத்தில் ஜூலை 13-ம் தேதி ரிலீசான இப்படத்துக்கு பெண்கள், குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல வசூலை வாரிக்குவித்து வெற்றி பெற்றிருக்கிறது.
அந்த வெற்றியை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள ஊடகங்களை சந்தித்தது படக்குழு. அந்த வெற்றி விழாவில் தஞ்சாவூரைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன் உள்ளிட்ட 5 விவசாயிகளைக் கெளரவித்து அவர்களுக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் சார்பாக தலா 2 லட்சம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார் சூர்யா.
அது மட்டுமில்லாமல் விவசாயத்தைப் பாதுகாத்து அதனை மேம்படுத்தும் பொருட்டு தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார் சூர்யா. அந்த விவசாயப் பணிகள் ‘அகரம் ஃபவுன்டேஷன்’ மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அந்தப் பணம் எப்படி எல்லாம் பயன்படுத்தப் போகிறது என்பது பற்றியும் இன்னும் சில வாரங்களில் தெரிவிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ”எல்லா புகழும் இறைவனுக்கே” என்று சொல்வதைப் போல ”எல்லா புகழும் பாண்டிராஜுக்கே என்று தான் சொல்ல வேண்டும். அவரைத் தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து இதை வெற்றிப் படமாக கொடுத்திருக்க முடியாது.
பிளாக் பஸ்டர் மேடையை நான் பார்த்தே வெகுநாளாகி விட்டது. இந்த மேடையில் நின்று பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் சினிமாவின் மூலம் கண்டிப்பாக நல்ல செய்திகள் பலவற்றை சொல்ல முடியும் என்று நிரூபித்துள்ளது. இங்கே நமது தமிழ்நாட்டில் நிறைய டாக்டர்கள், என்ஜினியர்கள் என்று பலர் உள்ளனர். ஆனால் ஒரு விவசாயியை கொண்டு வருவது கடினமான ஓர் விஷயமாக உள்ளது.
இந்த படம் வெற்றி பெற்றதுக்கு முக்கியமான காரணம் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அன்பு தான். எங்களை விட அதிகமாக வேர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான். அதனால் தான் ரூபாய் ஒரு கோடியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். எல்லோரும் கமர்ஷியலாக படமெடுக்கட்டும் ஆனால் நாங்கள் 2டி மூலம் மக்களுக்கு கருத்து சொல்லும் படங்களை தான் எடுப்போம்” என்றார்.