தயாரிப்பாளர்களின் கோரிக்கை செவி சாய்க்குமா அரசு?


திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கை:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களளின் பணிவான வணக்கம். தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் இதனால் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இன்னும் இருப்பதால், 50 முதல் 100 பேர் செயல்படும் ஷூட்டிங்/படப்பிடிப்பு செய்வதற்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து இந்த பணிகளுக்காக தற்போது 50 நாட்களாக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்து, படங்களை தயார் செய்ய முடியும்.

தற்போது 11 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதை போன்று, திரைப்படத்துறைக்கும் போஸ்ட்-புரொடக்சன் பணிகள் செய்வதற்கு, ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தங்களிடம் கேட்டுக்கொண்டபடி, நிபந்தனைகளோடு அனுமதி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம் இதன் மூலம், அந்த பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். கேரளா அரசாங்கமும் இந்த பணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளதை தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

தங்களின் அனுமதியை கோரும் போஸ்ட்-புரொடக்சன் பணிகள்:
படத்தொகுப்பு (Editing) – அதிக பட்சம் முதல் 4 பேர் 5 பணியாற்றும் அலுவலகம்.
ஒலிச்சேர்க்கை (Dubbing) – அதிக பட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.
கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் (VFX/CGI) – 10 முதல் 15 பேர் பணியாற்றும் அலுவலகம்.
டி. ஐ. (DI) எனப்படும் நிற கிரேடிங் – அதிக பட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.
பின்னணி இசை (Re-Recording) – அதிக பட்சம் 5 பேர் பணியாற்றும் இடம்.
ஒலிக் கலவை (Sound Design/Mixing) – அதிக பட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.
மேற்கூறிய போஸ்ட்-புரொடக்சன் பணிகளை நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி சுகாதாரமான முறையில் செய்வோம் என்று தயாரிப்பாளர்களாகிய நாங்கள் உறுதி கூறுகிறோம்”

நன்றியுடன்,
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்.

tamil cinema news
Comments (0)
Add Comment