திருட்டு விசிடி உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் வருகிற மே 30-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் என்று அறிவித்திருந்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால். ஆனால் அவருக்கு ஆதரவு தர பல சினிமா சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. ஏற்கனவே திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து விட்ட நிலையில் இன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் விஷாலின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தர மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றனர்.
தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் மைய குழு கூட்டம் (Tamil Film Chamber of Commerce – TFCC) இன்று அதன் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வரும் 30-ம் தேதி வேலை நிறுத்தம் என்று அறிவித்துள்ளது குறித்து விவாதித்தது.
நமது முதல்வரிடம் நேரில் சென்று திரையுலக குறைகளை சொன்ன உடனேயே அதிகாரிகளை அழைத்து அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதனால் வரும் 30ம் தேதி மாத்திரமல்ல வேறு தேதியிலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம்.
தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர் சங்கமும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பும் ஏற்கனவே வேலை நிறுத்தத்தில் பங்கு பெற மாட்டோம் என்று அறவித்துள்ளது. அதே போல் தமிழ் திரைப்பட வர்த்தக சபையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என்று அறிவித்துள்ளது.
கூட்டத்தில் தலைவர் அபிராமிராமநாதன், கலைப்புலி எஸ்.தாணு, அன்புசெழியன், சரத்குமார், சேரன், ராதாரவி, எஸ் வீ சேகர், ஜேகே ரித்தீஷ், பன்னீர்செல்வம், கே முரளீதரன், சிவசக்திபாண்டியன், டி சிவா, ஏஎல் அழகப்பன், டிஜி தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி, சித்ரா லட்சுமணன், கேஎஸ் சீனிவாசன், விஜயகுமார், தனஞ்ஜெயன், பிரமிட் நடராஜன், டாக்டர் சீனிவாசன், சுந்தரேசன், மூர்த்தி உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.