எவ்வளவு தூரத்துக்கு அமைதியாக இருந்தாலும் விஜய் படத்துக்கு மட்டும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை தலைமுடியைப் பிடித்து உலுப்பி விடுகிறது.
தெறி படத்தைப் பொருத்தவரை ரிலீஸ் வரை விஜய் யாரிடமும் வாய் திறந்து பேசவில்லை. குறிப்பாக அவர் மீடியாக்கள் முன்பு வரவேயில்லை.
ஒருவேளை வந்து ஏதாவது கருத்தைத் தெரிவித்து அது ரிலீஸ் நேர சிக்கலாகி விட்டால் என்ன செய்வது என்கிற முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்.
அப்படி இருந்தும் கூட செங்கல்பட்டு ஏரியாவில் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும் ஏற்பட்ட முட்டல் மோதலைத் தொடர்ந்து அந்த ஏரியா சம்பந்தப்பட்ட தியேட்டர்களில் தெறி ரிலீசாகவில்லை.
அப்படி இருந்தும் கூட ‘தெறி’ படத்தின் முதல் வார வசூல் 100 கோடியை தொட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது அந்தப் படத்தை வாங்காமல் முரண்டு பிடித்த விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வாங்கியிருந்தால் சம்பாதித்திருக்கலாமே? என்று இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று ரிலீசான இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து முதல் நாள் மட்டும் தமிழகத்தில் 13 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. அந்த வகையில் 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 47 கோடி வசூல் செய்துள்ள தெறி, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடி சுமார் 100 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
மேலும் இந்த சாதனை அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் வசூலையை மிஞ்சி விட்டது என்கிறார்கள். சென்ற ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான அஜித்தின் வேதாளம் படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் தீபாவளி தினத்தில் ரூ.15.5 கோடியை வசூலித்துள்ளது. 8 நாளில் தான் அதன் வசூல் 100 கோடியாக இருந்தது.
அந்த 8 நாட்கள் சாதனையை விஜய்யின் ‘தெறி’ படம் 6 நாட்களில் முறியடித்து விட்டதாக தியேட்டர் வட்டார அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.