சாதியும், அரசியலும் இல்லாத சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’!

மிழ்சினிமாவில் பெருமைக்குரிய படைப்பாக தயாரான ‘அப்பா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமுத்திரக்கனியின் இயக்கம் பிளஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படம் தான் ‘தொண்டன்’.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுனேனா ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தில் விக்ராந்த், ஆராதனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஞான சம்பந்தன், வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், , படவா கோபி, சவுந்திரராஜா மற்றும் பலர் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

தொண்டன் என்ற பெயரைக் கேட்டதும் இது அரசியல் பின்னணிப்படம் என்பது தான் நம் எல்லோர் மனதுக்குள்ளும் எழும் கேள்வியாக இருக்கும். ஆனால் இதில் துளி கூட அரசியலே இல்லை என்கிறார் சமுத்திரக்கனி.

தொடர்ந்து பேசியவர் நான் எப்போதுமே பத்திரிகைகளில் வருகிற செய்திகளை வைத்துத்தான் படமெடுப்பேன். அப்படித்தான் ஆறு மாதங்களாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை வைத்து தான் ‘அப்பா’ படத்தை எடுத்தேன். அதேபோல தான் இந்த ‘தொண்டன்’ படத்தையும் எடுத்திருக்கிறேன். அப்படி நான் படித்த ஈரோட்டில் கல்லூரிக்குள் நடந்த கொலைச் சம்பவத்தை வைத்துத்தான் இந்தப்படத்தை எடுத்திருக்கிறேன். ஈரோட்டில் கல்லூரிக்குள் சென்று வகுப்பில் மாணவியை ஒருவன் அடித்து கொலை செய்திருக்கிறான்.

ஆனால், அவனை யாரும் தடுக்க முன்வரவில்லை. இந்த சம்பவத்தை வைத்து தான் இப்படத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். இந்த சம்பவத்தை சுற்றி கதை நகர்ந்தாலும், தமிழகத்தில் நடந்த பல பிரச்சினைகளை பேசும் சமூக படமாகவே இப்படம் இருக்கும். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளையும் பேசியிருக்கிறேன். ஜாதி குறித்து ஒரு இடத்தில் லைட்டா பேசியிருப்பேன், அரசியலையும் லைட்டாகப் பேசியிருப்பேன். அவ்வளவு தான் மற்றபடி ஜாதிக்குள்ளும், அரசியலுக்குள்ளும் இந்த படம் போகாது.

என்றவர் இந்த படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வேடத்தில் நடித்திருக்கிறாராம். அவங்க தான் ஒரு உயிரை காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். நாம ஆம்புலன்ஸ் டிரைவர் குறித்து சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால் 7 நாள் கோர்ஸ் ஒன்றை முடித்துவிட்டு தான் அந்த வேலையை செய்கிறார்கள். அவங்க வேலை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள இரண்டு நாட்கள் 108 ஆம்புலன்ஸில் டிரைவருடன் சென்று நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

இரண்டு மணி நேரம் தான் படம். இந்த இரண்டு மணி நேரமும் எங்கும் திரும்ப முடியாத அளவுக்கு படம் விறுவிறுப்பாக இருக்கும். ஒரு சம்பவம் முடிந்த பிறகு, உங்கள் கவனத்தை சிதறச் செய்யாத வகையில் அடுத்த காட்சியில் மற்றொரு சம்பவம் என்று படம் முழுவதும் விறுவிறுப்பாக இருக்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறேன்.

இதில் விக்ராந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு கண்டிப்பாக விக்ராந்துக்கு பல வாய்ப்புகள் வரும். தற்போதே அவர் நடிக்கும் படங்களில் அவரது நடிப்பு குறித்து எல்லா தரப்பிலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இந்த படம் அவரை இன்னும் மேலே அழைத்துச் செல்லும்.” என்றார்.

இந்த ‘தொண்டன்’ கோபம் கொண்டவன் என்பதற்கு உதாரணமாக படத்தில் வருகிற கதாபாத்திர பெயர்களிலேயே தெரியப்படுத்துகிறார் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனியின் கதாபாத்திர பெயர் மஹா விஷ்ணு, அவரது தங்கை கதாபாத்திர பெயர் மஹிஷா சூரமர்தினியாம். விக்ராந்தின் கதாபாத்திர பெயர் விக்னேஷ், சுனைனா பெயர் பகழமுகி என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாகவும் படம் பேசப்படும் விதத்தில் தயாராகியிருக்கும் இந்தப்படம் சமூகத்தின் விழிப்புணர்வுக்கு கூடுதல் மருந்தாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

SamuthirakaniSunainaThondanThondan Movie NewsVikranth
Comments (0)
Add Comment