திருவாரூர் மத்திய பல்கலைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் சென்னையில் ‘கலைஞர் புகழ் வணக்கம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பேசிய வைரமுத்து, ”தமிழர்களின் வாழ்வில் ஒரு இன்னிசை போல எப்போதும் கருணாநிதி ஒலித்துக் கொண்டே இருப்பார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ”பல மாதங்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையில் முதல் முறையாக அவர் அனுமதிக்கப்பட்டபோது தொலைபேசியில் பேசினேன். சொற்கள் இன்னும் மிச்சமிருந்த காலம் அது. ‘நான் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

அவர் ஏதோ சொன்னார்; எனக்குப் புரியவில்லை. ‘என்ன சொல்கிறார்’ என்று அவர் அருகில் இருந்த உதவியாளர் நித்யாவைக் கேட்டேன். ‘நானும் உங்களையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன்’ என்று கலைஞர் சொன்னதாகக் கூறினார். என் எழுகை அன்றே ஆரம்பமாகி விட்டது. இன்றும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்; வாழ்நாளெல்லாம் நினைத்துக் கொண்டேயிருப்பேன்.

கலைஞரின் நினைவைப் போற்ற வேண்டும். திருவாரூரில் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞரின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

KalaignarKalaignar Pugazh VanakkamKarunanidhiNakkeran GopaluVairamuthu
Comments (0)
Add Comment