விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில் மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருதை வென்ற நடிகர் அப்புக்குட்டி.
படம் பற்றி அவரிடம் கேட்டபோது, “எனக்கு ‘அழகர்சாமியின் குதிரை’ படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி’ கதை அமைந்திருக்கிறது.
ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது, களை எடுப்பது, கதிர் அடிப்பது, அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும். எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
அதோடு நாயகி வசுந்தரா பற்றி பேசும்போது, இந்தப் படத்தில் நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது .அவர் என்னை விட உயரமாக இருப்பாரே. என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை. அவர் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது. ‘பேராண்மை’யிலும் நன்றாக நடித்திருந்தார். ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது.
அவர் உயரம் தெரியாத படியும் நிறம் தெரியாத படியும் சரி செய்து மாற்றங்கள் செய்து மேக்கப்பில் நிறத்தை குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்க வைத்து விட்டார்கள். வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை. அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது. அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித் தரும்” என்றார்.