பூமியை மலடாக்கி விட்டு மாட மாளிகை கட்டி என்ன பயன்? : விவசாயிகளின் அவலத்தை சொல்ல வரும் “வேலையில்லா விவசாயி”

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ”வேலையில்லா விவசாயி”. கதாநாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் – P.V.பிரசாத். இவர் மாபெரும் வெற்றி காதலில் விழுந்தேன் படத்தை இயக்கியவர்.

வேலை இல்லா விவசாயி என்கிற இந்த கதைக் கருவை எடுக்க காரணம் என்ன என்று பி.வி பிரசாத் கூறும் போது… ”எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். செய்யாரை சுற்றி நிறைய நிலம் எங்களுக்கு இருந்தது. இருந்தது என்று தான் சொல்ல முடியுமே தவிர இருக்கிறது என்று சொல்ல முடியாது.

கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் பசுமையாக காட்சி தந்த அந்த விவசாய நிலங்கள் எல்லாம் பங்களாக்களாக மாறி விட்டது. எல்லாம் இருக்கிறது சோறு தான் இல்லை என்கிற சோகம் அடுத்த தலைமுறை மக்களின் குரலாக ஒலிக்க போகிறது.

ஐய்யோ தவறு செய்து விட்டோமே என்று நாம் அப்போது காலம் கடந்து யோசிக்கப் போகிறோம். எந்த தொழில் புரட்சியும் பசியை போக்காது. எந்த விஞ்ஞானமும் பூமித் தாயைப் போல அரிசியையும் கோதுமையயும் விளைவிக்காது.

பூமியை மலடாக்கி விட்டு மாட மாளிகை கட்டி என்ன பயன்? ஊருக்கெல்லாம் சோறு போட்ட நாம் அரிசியையும் பருப்பையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். செய்யாறில் பண்ணையாராகவும் விவசாயியாகவும் பெருமையாக வலம் வந்த பல பேரை பங்களா வாட்ச்மேனாகவும், ஏ.டி.எம் வாட்ச்மேனாகவும் பார்த்திருக்கிறேன்.

தன் நிலத்தை வாங்கியவர்கள் அதே ஏ.டி.எம் களில் வந்து கை நிறைய பணத்தை எடுக்கும் அவர்களை ஏக்கமாக பார்க்கும் அவலத்தையும் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் தான் விவசாயியின் குரலாக இதில் பதிவு செய்கிறோம்.

செய்யாறு காஞ்சிபுரம் அதை சுற்றி உள்ள இடங்களில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம் என்றார் இயக்குனர்.

BismayaP V PrasathVelaiyilla VivasayiVelaiyilla Vivasayi Movie News
Comments (0)
Add Comment