மெலோடி பாடல் விரும்பிகள் இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் நனையும் நேரம் இது! ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 1’ படத்தில் இருந்து ‘உன்னோட நடந்தா’ முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதன் அறிவிப்பு வந்ததில் இருந்து பாடல் குறித்தான எதிர்பார்ப்பு அதிகம் நிலவியது. குறிப்பாக இசைஞானி இளையராஜா மற்றும் தனுஷ் இருவரின் பாடல் பதிவு செய்யும் புரோமோ வீடியோவுக்கான காட்சிகளும் இளையராஜா மற்றும் தனுஷ் இருவரின் நகைச்சுவைப் பேச்சும் என இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது.
நீண்ட காலமாக மனதை மயக்கும் மெலோடி பாடலை எதிர்பார்த்து காத்திருந்த இசை ஆர்வலர்களுக்கு இந்த ‘உன்னோட நடந்தா’ பாடல் உடனடி இசை போதையாக மாறியிருக்கிறது. தனுஷின் கவர்ச்சியான குரல், பாடலாசிரியர் சுகாவின் மயக்கும் வரிகள், அனன்யா பட்டின் தேன் கலந்த குரல், வசீகரிக்கும் இசை போன்றவை இந்தப் பாடலை மேலும் பிடிக்கச் செய்திருக்கிறது.பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளேயே 2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. ’உன்னோட நடந்தா’ பாடலுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பைப் பார்த்து, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து மலர்கொத்துகளைக் கொடுத்து நன்றி தெரிவித்தனர்.