மாஸ் கேட்டகிரி ஹீரோக்களெல்லாம் புதிதாக ஆரம்பிக்கும் தங்கள் படங்களில் எந்தெந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் வேலை செய்ய வேண்டுமென்பதை அவர்கள் தான் பெரும்பாலான சமயங்களில் முடிவு செய்வார்கள்.
இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் பல நேரங்களில் படத்தின் நாயகி உட்பட ஹீரோ டிக் செய்து கொடுப்பவர்களையே அப்படத்தை இயக்கும் இயக்குநரும் தேடிப்பிடித்து ஓ.கே செய்வார். தயாரிப்பாளரும் ஹீரோ சொல்கிறாரே? தட்டமுடியுமா? என்று சம்பந்தப்பட்டவர்கள் கேட்கிற சம்பளத்தை கொடுப்பார்.
இந்த வழக்கமான லெவலையும் தாண்டி தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளத்தைக் கூட ஹீரோவே நிர்ணயிக்கும் வேலையை ஆரம்பித்து விட்டது கோலிவுட்.
அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் விஜய்.
பரதன் இயக்கி வரும் ‘பைரவா’ முடிந்ததும் 61-வது படத்துக்கு அட்லிக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். அட்லி இயக்கிய ‘தெறி’ நல்ல வசூலோடு ஹிட்டானதால் இந்தப் பட வாய்ப்பு அவருக்கு போயிருக்கிறது.
கால்ஷீட் கொடுத்ததோடு ஒதுங்கி விடாமல் இன்னொரு வேலையையும் செய்திருக்கிறார் விஜய். அதாவது இந்தப் படத்தில் அட்லிக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற கண்டிஷன் தான் அது!
‘ராஜா ராணி’, ‘தெறி’ என்று இரண்டே இரண்டு படங்களை இயக்கிய அட்லிக்கு ஷங்கர் ரேஞ்சில் சம்பளம் கேட்டால் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும்.
இருந்தாலும் படத்தை தயாரிக்க முடிவு செய்த தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விஜய்யின் கோரிக்கைக்கு செவி சாய்க்க தயாராகி விட்டதாகத் தெரிகிறது.
ஒருவேளை மேற்படி சம்பளம் அட்லிக்கு கொடுக்கப்படுமானால் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் பட்டியலில் அட்லிக்கும் இடம் கிடைத்து விடும்.
தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.