எல்லோரும் செய்யலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே நேக்காக கொத்திக் கொண்டு போய் விட்டார் நடிகர் விக்ரம் பிரபு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா நெருங்குடா’ என்ற பாடலில் உள்ள ‘நெருப்புடா’ என்ற வார்த்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
‘கபாலி’ ரிலீஸ் ஆனாலும் இந்த ‘நெருப்புடா’ ஜூரம் நிற்கப்போவதில்லை. இதை உணர்ந்து கொண்ட விக்ரம் பிரபு ‘ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ (First Artist) என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்ததோடு அதில் தயாராகப் போகும் முதல் படத்துக்கு ‘நெருப்புடா’ என்ற பவர்புல் வார்த்தையே டைட்டிலாக வைத்து விட்டார்.
பி.அசோக் குமார் என்ற புதிய இயக்குநர் இயக்கும் இப்படத்தில், தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் விக்ரம் பிரபுவே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
மற்றும் பொன் வண்ணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதன் ராவ், நாகிநீடு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை, விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘சந்திரா ஆர்ட்ஸ்’ மற்றும் ‘சினி இன்னோவேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்களும் தயாரிக்கின்றன.
ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
விக்ரம் பிரபு, இசக்கி துரை, ஆர்.கே.அஜெய்குமார் தயாரிக்கிறார்கள்.
பொழைக்கத் தெரிஞ்ச புள்ள!