தமிழக பி.ஜே.பி தலைவர்கள் ‘மெர்சல்’ படத்துக்கு எதிராக இறங்கியது அப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரமாகி விட்டது.
இதுவரை அந்தப்படத்தை பார்க்க விரும்பாதவர்கள் கூட, அல்லது பார்க்க நேரம் இல்லாதவர்கள் கூட நேரம் ஒதுக்கி தியேட்டர்களுக்கு சென்று பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த எந்தக் கருத்துகள் மக்கள் மத்தியில் போய்ச் சேரக்கூடாது என்று பி.ஜே.பி தலைவர்கள் நினைத்தார்களோ? அது எல்லாமே போய் சேர்ந்து விட்டது.
அந்தளவுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இதற்கிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பி.ஜே.பியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ‘மெர்சல்’ படத்தை நான் இணையதளத்தில் தான் பார்த்தேன் என்று கூறியிருப்பது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
குறிப்பாக இதுபோன்ற ஆன்லைன் பைரசிக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் ஹெச்.ராஜாவின் இந்த போக்கை கடுமையாக கண்டித்திருக்கிறார்.
இதுகுறித்து விஷால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…
”ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொது வெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கி விட்டதா அரசுகள்? அதனால் தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
எச். ராஜா அவர்களுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்து கொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு விஷால் கூறியிருக்கிறார்.