இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன், ஹரி பாஸ்கர் தான் அவர். நடிப்புப் பசியோடு கோடம்பாக்கத்தை வலம் வந்தவருக்கு முதல் படமே பேய்பசி டைட்டிலாக அமைந்திருக்கிறது.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கும் இப்படத்தை, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கியிருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.
‘பேய்பசி’ என்றதும் இது ஏதோ பேய்ப்படம் என்று நினைத்து விட வேண்டாம். இது ஒரு த்ரில்லர் படமாம்.
முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது தான் என்று நினைக்கிறேன். படத்தின் முதுகெலும்பு யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை தான். அந்தளவுக்கு அதை அவர் மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார். பின்னணி இசையில் லைவ் சவுண்ட்டை முயற்சி செய்திருக்கிறோம். அது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன் என்கிறார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ”ஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டில் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே தயாரிக்க முடிவு செய்தேன், அதன் பின் இலங்கை சென்று விட்டான். தற்போது இந்த படத்தில் நடித்து விட்டான்.
இந்தப் படத்துக்கு நான் தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அவனுடைய அன்புக்காக இசையமைத்திருக்கிறேன். அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்த காலகட்டத்தில் அவசியம். காசு, பணம் தாண்டி அன்பை பகிர்ந்து கொள்ள எல்லோரும் முன் வர வேண்டும் என்றார்.
பொதுவாகவே பட விழாக்களில் அதிகம் பேசாத யுவன் முதல் முறையாக சினிமாவைத் தாண்டி சமூகம், குடும்பம், அன்பு என பேசி அசத்தியது விழாவுக்கு வந்திருந்தவர்களை அடடே… என்று புருவம் உயர்த்த வைத்தது.
விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, தீரஜ் ரெட்டி, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, தேனாண்டாள் ஹேமா ருக்மணி, எடிட்டர் மோகன் முருகதாஸ், கலை இயக்குனர் மதன், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.