ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு கடும் எதிர்ப்பு!
தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் ரிலீசாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ரமணா.
இந்திய மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களை படம்பிடித்துக் காட்டிய இப்படத்தை தற்போது ஹிந்தியில் கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் ரீமேக்காகியிருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதையில் உருவான இப்படத்தை க்ரிஷ் இயக்கியுள்ளார். ரிலீசான நாளான மே 1-ம் தேதியிலிருந்து இன்றுவரை சுமார் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
தற்போது இப்படத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் (IMA) இப்படம் மருத்துவர்களை கேவலப்படுத்துவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமை நிர்வாகிகளான மருத்துவர்கள் ஏ. மார்த்தாண்ட பிள்ளை, கேகே அகர்வால் ஆகிய இருவரும் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது :
‘’கப்பார் இஸ் பேக்’ படத்தில் மருத்துவத் துறையை மோசமாக சித்தரித்துள்ளதைக் கண்டு வேதனை அடைந்துள்ளோம். மருத்துவத்துறையை இழிவுபடுத்தும் விதமாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் சித்தரித்துள்ளார்கள். இதற்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.
இந்தப் படத்தில் இறந்து போன ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற ஒரு காட்சி உள்ளது. சமீபகாலமாக மருத்துவர்கள் மீதான வன்முறை அதிகமாகிவிட்ட சமயத்தில், இந்தப் படம் தவறான முன்னுதாரணத்தை அளிக்கிறது. இது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல உள்ளது. மருத்துவர்கள் மீதான வன்முறை மேலும் தூண்டவே இது உதவும். இதனால் இந்தக் காட்சி உடனடியாக படத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்று ஐஎம்ஏ விரும்புகிறது.
அப்படி செய்யும்வரை இந்தப் படம் புறக்கணிக்கப்பட வேண்டும். தடை செய்யப்படவும் வேண்டும். இந்தப் பிரச்னை தொடர்பான விழிப்புணர்வுக்காக அந்தக் காட்சியின் வீடியோ அனைத்து மருத்துவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தணிக்கைத் துறை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, சுகாதாரத்துறை, உள்துறை ஆகிய அரசு அமைப்புகள் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களின் உதவியுடன் ஐஎம்ஏ தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அகர்வால், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தப் படத்தில் மருத்துவத்துறை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. புனிதமான மருத்துவத் துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க வாய்ப்புண்டு. இதனால் படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.