ராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி!
தென்னிந்திய சினிமாவின் புகழை தனது ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகமெங்கும் கொண்டு சென்றவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
இன்றளவும் பிரம்மாண்டத்தின் சிகரமாக பேசப்படும் அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகும் படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் ‘பாகுபலி’யைத் தொடர்ந்து ராம் சரண், ஜூனியர் என்.டி,ஆர் இணைந்து நடிக்கும் ‘ஆர் ஆர் ஆர்’ என்ற சரித்திரப் படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக பல கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் ராஜமெளலி. சரித்திரப் படம் என்பதாலும், படப்பிடிப்புக்கு அதிக நாட்களை கொடுக்க வேண்டும் என்பதாலும் பல முன்னணி நாயகிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்தப்படத்தில் நடிப்பதற்காக முதலில் ஓ.கே சொன்ன இங்கிலாந்து நடிகை டெய்சி எட்கர் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், குடும்ப சூழல் காரணமாக தன்னால் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்று டெய்சி விலகி விட்டார்.
அடுத்து பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் நடிப்பதாக இருந்தது. தற்போது அவரும் தனக்கு குடல் தொற்று நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால் நடிக்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் தற்போது அந்த கேரக்டரில் சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.