என்னதான் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் என்றாலும் அவர் இயக்குகிற புதுப்படத்துக்கு பணத்தை இறைப்பது என்பது கொஞ்சம் கவனமாகத்தானே செய்ய வேண்டியிருக்கிறது?
அப்படி ஒரு முடிவைத்தான் எடுத்திருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸின் புதுப்பட தயாரிப்பாளர்.
ஹிந்தியில் அகிராவை முடித்த கையோடு தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக மகேஷ்பாபுவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் இதுவரை இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட்டாக இந்தப்படத்துக்கு 110 கோடி ரூபாய் பட்ஜெட்டை கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
முதலில் சம்மதம் சொன்ன தயாரிப்பாளர் பின்னர் படப்பிடிப்புக்கு போனால் அங்கு கால தாமதம், இன்னபிற செலவுகள் என திடீரென்று சில செலவுகள் வரலாம். அதையெல்லாம் கணக்கு போட்டால் இந்த பட்ஜெட்டை விட அதிகமாகலாம். அதனால் 90 கோடிக்கு பட்ஜெட் போட்டு தாருங்கள் என்று சொல்ல, முருகதாஸும் அவ்வாறே பட்ஜெட்டை கொடுத்திருக்கிறாராம்.
மேலும் பாகுபலியைப் போல அதிக பட்ஜெட்ட்டில் தயாராகும் படமென்பதால் படப்பிடிப்பு முடிகிற சமயத்தில் கூடுதல் செலவீனத்துக்கு இந்த பணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னாராம் தயாரிப்பாளர்.
அதுவும் சரிதான் என்று சம்மதம் சொல்லி படப்பிடிப்புக்கான வேலைகளை தொடர்ந்து கவனித்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இப்படத்தின் துவக்க விழா வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு அன்று சென்னையில் ஆரம்பமாக இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, படத்தின் நாயகி தேர்வு வேகமாக நடைபெற்று வருகிறது.