தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2015- 2018 ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நண்பகல் 11 மணி வரை சுமார் 1000 ஓட்டுகள் பதிவாகி அமைதியான சூழலில் நடந்து வந்த தேர்தலில் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.
விஷால் அணியில் போட்டியிடும் நடிகை சங்கீதாவை நடிகர் சரத்குமாரே நேரடியாக தாக்க முற்பட்டிருக்கிறார். அப்போது அதைத் தட்டிக்கேட்கப் போன விஷால் மீது சரத்குமார் அணியைச் சேர்ந்த சிலர் தாக்கியியிருக்கிறார்கள்.
அதேபோல வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் திடீரென்று அரை மணி நேரம் வேலை செய்யவில்லை என்றும், அதை காண்பதற்காக வைக்கப்பட்டிருந்த திரையும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் வாக்குப்பதிவு மையத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் விஷால் அணியினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இதனால் தேர்தல் நடைபெறும் இடம் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து கருத்து கூறிய நடிகர் விஷால் ”என்னை அடித்தாலும் தேர்தல் நடந்தே தீரும். தேர்தல் எந்த நேரத்தில் இடையில் நிற்காது. நாங்கள் வன்முறையில் இறங்க மாட்டோம். ஆனால் நடிகைகள் மீது கை வைப்பதை அனுமதிக்க முடியாது. நடிகரே அல்லாத ஒருவர் என்னை அடிக்க முன் வந்தார்” என்றார்.