நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய படம்!

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இது விஷாலின் 34வது படமாகும். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் படக் குழுவினர் இதில் பங்கேற்றனர். தேவி ஶ்ரீ பிரசாத் அதிரடி இசையில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படம் சென்னை, தமிழ்நாட்டின் தென் பகுதிகள், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது.

இப்படத்தை தயாரிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “விஷால் மற்றும் ஹரி உடனான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த வெற்றி கூட்டணியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

Actor VishalDirector Hari