தொடர்ந்து மினிமம் பட்ஜெட்டில் நல்ல கதையம்சமுள்ள வெற்றிப் படங்களை தயாரித்து வரும் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிப்பில் தயாராகி வரும் புதிய படம் தான் ”அதே கண்கள்.”
விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரோஹின் வெங்கடேசன் இயக்கும் இப்படத்தில் கலையரசன் நாயகனாக நடிக்க, அவரோடு ஷிவதா, ஜனனி ஐயர் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.
1967ம் ஆண்டு ரவிச்சந்திரன் – காஞ்சனா நடிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ரிலீசான அதே கண்கள் டைட்டிலோடு தயாராகி வந்தாலும் பழைய படத்தின் கதைக்கும், இந்தப்படத்தின் கதைக்கும் துளியும் சம்பந்தமில்லையாம். ஆனால் டைட்டில் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருந்தது என்றார் இயக்குநர் ரோஹின்.
எப்படி?
இந்தப்படத்துல நான் பார்வை தெரியாத ஒரு செஃப் ஆக நடிச்சிருக்கேன். ஆரம்பத்துல எனக்கு பார்வை தெரியாவிட்டாலும் கதை நகர நகர ஒரு கட்டத்துல எனக்கு பார்வை வந்திடும். எனக்கு கண் தெரிய ஆரம்பிச்சதும், எனக்கு கண்ணு தெரியாதப்போ நடந்த விஷயங்களைத் தேடி போவேன். அந்த விஷயங்கள் எல்லாமே திரையில பார்க்கும்போது ரசிகர்களுக்கு ரொம்பப் புதுசா இருக்கும் அப்படி நடக்கிற விஷயங்களை ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ப்ளஸ் ஒரு முக்கோண காதல் கதையாகவும் சுவாரஷ்யமா தந்திருக்கிறார் இயக்குநர் ரோஹின் என்றார் ஹீரோ கலையரசன்.
இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கும் ஜனனி ஐயர் படத்தில் ஒரு நிருபராக நடிக்கிறார். இன்னொரு நாயகியான ஷிவதா ஒரு துணிக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் மிடில் கிளாஸ் பெண்ணாக வருகிறாராம்.
வரும் டிசம்பர் மாத ரிலீசுக்கு தயாராகி வருகிறது ”அதே கண்கள்.”