‘ஐரா’ என்று டைட்டிலோடு தயாராகும் இப்படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார். பிரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்கிறார். கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
“நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமையான விஷயம். ‘அறம்’ படத்துக்குப் பிறகு அவருடைய மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த “ஐரா” படமும் அவருடைய மார்க்கெட்டை கூடுதல் உச்சத்துக்கு கொண்டு செல்லும்.
இயக்குனர் சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார்.
‘ஐரா’ என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு ஹாரர் படமாக தயாராகி வருகிறது” என்றார் தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ்.