கடந்த சில தினங்களாக வருகிற ஏப்ரல் 17-ம் தேதி நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடக்க இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியைப் பற்றி கடுமையாக விமர்சித்து ‘வாட்ஸ்-அப்’பில் ஒரு கருத்து உலா வந்தது.
அதில் நடிகர் அஜித் ”கிரிக்கெட் போட்டியை எதிர்ப்பதாகவும் நடிகர், நடிகைகளே சங்க கட்டிடத்துக்கான நிதியை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு நானும் பணம் தருகிறேன். ரசிகர்களிடமும், மக்களிடமும் கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் பணத்தை சுரண்ட வேண்டாம்” என்று நடிகர் சங்கத்துக்கு அட்வைஸ் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அஜித் அப்படி ஒரு கருத்தை சொல்லியிருக்க நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை என்கிற உண்மை ஒருபுறமிருக்க, அதை உண்மை என்று நம்பிய அவரது ரசிகர்கள் நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டியையும் முக்கிய நிர்வாகிகளின் ஒருவரான நடிகர் விஷாலையும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கி விமர்சித்து வருகிறார்கள்.
அஜித் எப்படியும் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்பது முடிவான விஷயமாக இருக்க, பரவிக் கிடந்த அந்த கருத்துக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக இன்று வாட்ஸ்-அப்பில் நட்சத்திர கிரிக்கெட்டு ஆதரவாக ஒரு கட்டுரை உலா வந்தது.
அதை படிக்கும் போது அஜித் – விஷால் மோதம் ஆரம்பமாகி விட்டது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
இதோ அந்த பதிலடி கட்டுரை :
ஒரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார்.
ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம் போஸ்ட் பெய்டு, ப்ரீபெய்டு, நெட் பேக், காலர் ட்யூன் ஆகிய வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.
அதே போலத்தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு மேம்பட நட்சத்திர கிரிகெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள்.
நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்டிடம் கட்ட முடியும், ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர்.
ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியை காட்டவும், பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களை கொண்டு தனது திரை குடும்பத்தையே விட்டு கொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலைத்துறை சார்ந்த எந்த ஒரு விழாக்களை முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே… நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப்படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்?
நடிகர் நடிகைகள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்கு கூட முக்கியத்துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பு இல்லை. ஒரு சில நடிகர்களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும்.
தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங்களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம். அவர்களை வருந்த செய்யாமல் இருந்தாலே போதும். பழங்காலத்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்ய வேண்டும் என்றனர். ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்தவருக்கு தெரியவேண்டும், அப்போது தான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள். இங்குள்ள அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறிய வேண்டும். அந்த ரசிகர்களுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கின்றனர். அவர்களுக்கு அடுத்தவர்களை குறை குறைவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை.
சில நடிகர்கள் சொல்லுமாறு நடிகர் சங்க கட்டிடம் நடிகர்களின் சொந்த செலவில் கட்டப்பட வேண்டும் மக்களை சுரண்ட கூடாது என்கின்றார்களே. அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவு சீட்டு வாங்கிய பிறகு தானே திரையரங்கம் உள்ளே விடுகிறார்கள். அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே? அல்லது தங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப் படக்கூடாது என்று நினைத்தால் இலவசமாக படம் நடித்து திரையிட வேண்டியது தானே?
இந்திய கிரிக்கெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்று தான் செல்ல வேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப்படுகிறது என்று குற்றம் சாற்றுவர்களோ? தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறிய முடியும்?
சினிமா என்பது ஒரு பொழுது போக்கு. அவர்கள் அவர்களது திரை குடும்ப தேவைகளை சரி செய்ய அனைத்து நடிகர்களும் ஒன்று கூடி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்கு அல்ல என்பதை அறியவேண்டும்.
விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.