சொல் பேச்சு கேட்காத அமலாபால்! : விவாகரத்து பின்னணியில் வெளிவராத தகவல்கள்

தோ இன்னொரு நட்சத்திர ஜோடியான இயக்குநர் விஜய் – அமலாபால் ஜோடி விவாகரத்து வரைக்கும் வந்து விட்டது.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அமலாபால் ‘தெய்வ திருமகன்’, ‘தலைவா’ படங்களில் நடித்த போது அந்தப் படங்களின் இயக்குநர் விஜய்யுடன் காதல் வசப்பட்டார்.

இருவருடைய காதலும் பல மாதங்களாக ரகசியம் காக்கப்பட்டு வந்த நிலையில் விஜய் தயாரித்து இயக்கிய ‘சைவம்’ ஆடியோ விழாவில் நடிகர் பார்த்திபன் அந்தக் காதலை மீடியாக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார்.

இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு இயக்குநர் விஜய்யும், அமலாபாலும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி இரண்டே வருடங்கள் ஆன நிலையில் இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமான இப்போது விவாகரத்து வரைக்கும் வந்திருக்கிறது.

முதலில் இந்தச் செய்தி வெறும் வதந்தியாக இருக்குமோ? என்று எல்லோரும் நினைத்த நிலையில் இரண்டு பேருமே வந்த செய்தியை மறுக்கவில்லை.

இருந்தாலும் ”என் பெற்றோர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என்று இயக்குநர் விஜய் விளக்கமளித்தார்.

அதிலேயே விவாகரத்து உறுதியாகி விட்ட நிலையில், தயாரிப்பாளரும் விஜய்யின் அப்பாவுமான ஏ.ஏல்.அழகப்பன் இதுகுறித்து கூறும் போது ”ஆமாம் விவாகரத்து தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருவது உண்மை தான்” என்றார்.

மேலும் அவர் ”அந்தப் பொண்ணு (அமலாபால்) திருமணத்துக்குப் பிறகு படங்கள்ல நடிச்சுக்கிட்டே இருக்காங்க. படங்கள்ல நடிக்கப் போயிட்டா குடும்பத்தை யார் பார்த்துக்கிறது? இது விஜய்க்குப் பிடிக்கல அதனால தான் இரண்டு பேரும் விவாகரத்துக்கு பேச்சு வார்த்தை நடந்துக்கிட்டு வருது. அந்தப் பொண்ணுக்கிட்ட அவங்க வீட்லேயே பேசிப்பார்த்தாங்க. ஆனா அது அவங்களோட அம்மா- அப்பா பேச்சையும் கேட்க மாட்டேங்குது” என்றும்  கூறியிருக்கிறார்.

இன்னொரு பக்கம் அமலாபால் தொடர்ந்து நடிப்பதை இயக்குநர் விஜய் அனுமதித்தாலும் அவரது வீட்டார் அதை  விரும்பவில்லை, அதனால் தான் இப்போது விவாகரத்து வரை இருவரும் வந்து நிற்கிறார்கள் என்கிறார்கள்.

எது எப்படியோ? ஒரே துறையில் இருக்கும் ஒரு நட்சத்திர காதல் ஜோடி இதுபோன்ற காரணத்துக்காகவெல்லாம் பிரிவதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

Amala PaulDirector Vijay
Comments (0)
Add Comment