விஷ்ணு விஷால், அமலாபால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நாயகி அமலாபால் பேசியதாவது, இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, படம் எப்போது ரிலீசாகும் என்று காத்துக் கொண்டிருந்தோம். இயக்குனர் ராம் என்னிடம் கதையை சரியாக சொல்லவில்லை, பின்னர் விஷ்ணு தான் அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என சொல்லி, அவரே கதையை எனக்கு விளக்கினார். கதை ரொம்பவே பிடித்தது.
ராம் ரொம்பவே கடின உழைப்பாளி, நேரம் எடுத்து மிகவும் விரிவாக, தெளிவாக படத்தை எடுப்பார். சினிமாவில் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையாது, விஷ்ணு இந்த படத்துக்கு பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார். நடிக்க வருபவர்களுக்கு விஷ்ணு ஒரு இன்ஸ்பிரேஷன். படத்துக்காக அவருடைய உழைப்பு அபரிமிதமானது.
ஒட்டுமொத்த படக்குழுவும் படம் சிறப்பாக வருவதற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கிறது. திரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள், ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கும் என்றார்.
விழாவில் நடிகர் காளி வெங்கட், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த், ஒளிப்பதிவாளர் பிவி சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.