தமிழகத்தில் விவசாயம் செய்வதும், தமிழில் படமெடுப்பதும் ஒன்று தான். போட்ட முதலீடு கிடைத்தாலே பெரிய விஷயம். அதைத்தாண்டி லாபல் என்று சில லட்சங்கள் கிடைத்தாலே பெரும் மகிழ்ச்சி. இப்படித்தான் தமிழ்சினிமாவில் பல தயாரிப்பாளர்களின் நிலைமை கவலைக்கிடமாகிக் கிடக்கிறது.
இந்த பரிதாப நிலையிலும் தொடர்ந்து படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் தமிழ்சினிமா தயாரிப்புத் துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்.
இவருடன் லியோ விஷன் சார்பில் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படமான ‘அண்டாவ காணோம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு தனது ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினார் சதீஷ்குமார். ‘அண்டாவ காணோம்’ படத்தில் ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தன் தயாரிப்பு நிறுவனத்தில் வெளியான படங்களை இயக்கிய அத்தனை இயக்குநர்களையும், தன் நலம் விரும்பிகள் ஆர்.கே.சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களையும் அழைத்திருந்தார் ஜே.எஸ்.கே சதீஷ்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் ”என் சினிமா கேரியரில் தெரிந்தோ, தெரியாமலோ ஆரம்பத்தில் இருந்தே சதீஷ்குமாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அவர் மாதிரி ஒரு படத்தை கொண்டு சேர்ப்பது என்பது யாராலும் முடியாது. தேசிய விருதுக்கு படங்களை அனுப்பி, அவற்றிற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவது என்பது அவரால் மட்டும் தான் முடியும். அவரை பின்பற்றி தான் தர்மதுரை படத்துக்கு தேசிய விருது பெற்றோம். எதிர் அணியில் நான் இருந்தால் கூட என் நலனுக்காக யோசிப்பவர் தான் சதீஷ்குமார்” என்றார்.
”ஸ்ரியா ரெட்டியை தமிழ்சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி என சொல்லலாம். இந்த மாதிரி படங்களை தைரியத்தோடு எடுக்க சதீஷ்குமாரால் தான் முடியும். யார் அதிக இயக்குனர்களை அறிமுகப்படுத்துவது என்ற போட்டி அவருக்கும் எனக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும் அதில் எனக்கு முன்னால் சென்று கொண்டேயிருக்கிறார் சதிஷ்” என்றார் மனோபாலா.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை நிறைய பேர் பார்த்தார்கள், நிறைய காட்சிகளை கட் செய்ய சொன்னார்கள். யாரும் படத்தை வாங்கவில்லை. படத்தை பார்த்த சதிஷ்குமார் சார் கட் எதுவும் செய்ய தேவையில்லை, அப்படியே ரிலீஸ் செய்யலாம்னு சொன்னார். அதோடு பொய்யாக 20 நிமிடம் கட் செய்து விட்டோம் என சொல்லி தான் படத்தை ரிலீஸ் செய்தார்.
அது சரியான விதத்தில் மக்களை சென்றடைந்தது. ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பது ஒரு இயக்குனருக்கு எவ்வளவு பெரிய வலியாக இருக்கும் என்பது இயக்குனர்களுக்கு மட்டுமே தெரியும் என உணர்வுப் பூர்வமாக பேசி விட்டு போனார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.
9 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் நடிக்க வந்திருக்கும் படம், இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு ”திமிரு” பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேரா ஷூட்டிங்க்கு வாங்கன்னார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது என்றார் நாயகி ஸ்ரியா ரெட்டி.
எந்த ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட்டை வைத்து படம் எடுக்காமல், கோடிகள் கொட்டி கொடுத்து படம் எடுக்காமல் 10 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது பெரிய சாதனை. அந்த வகையில் ஜேஎஸ்கே மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார். ஒரு படத்தை எடுத்து விட்டு ரிலீஸுக்கு காத்திருக்கும் இயக்குனர்களுக்கு அதன் தயாரிப்பாளரோடு முரண் நிச்சயம் இருக்கும். ஆனாலும் ஜேஎஸ்கே சதீஷ்குமாருடன் அந்த முரண் நிச்சயம் எங்களில் யாருக்குமே இருக்காது. என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக சொல்லி நம்மை சமாதானப்படுத்தி விடுவார். ”தரமணி” படத்துக்கு 14 கட் கொடுத்து யு/ஏ சான்றிதழ் கொடுக்க முன் வந்தனர் தணிக்கை குழுவினர். ஆனால் கட் வாங்காமல் ஏ சான்றிதழ் வாங்கிக் கொண்டு வந்தார் சதீஷ். அவரை போல ஒரு தயாரிப்பாளரை பார்க்க முடியாது. ”அண்டா”வுக்கு பல உள் அர்த்தங்கள் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றார் இயக்குனர் ராம்.
இயக்குனர் வேல்மதி ஒரு கிராமத்தில் இருக்கும் 300 பேரை நடிக்க வைத்து எடுக்கப் போகிறேன் என சொன்னார். அந்த கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார் இயக்குனர். இந்த மாதிரி ஒரு கதை என்று சொன்னவுடன் முதலில் நாங்கள் நடிக்க கேட்டுப் போனது ஸ்ரியா ரெட்டியை தான். என் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு நிச்சயம் தேசிய விருது பட்டியலில் இந்த அண்டாவ காணோம் இடம் பிடிக்கும். இயக்குனர் ராமின் தரமணி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும். தலயோட நாங்களும் கெத்தா வரோம் எனப் பேசினார் தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார்.
இயக்குனர்கள் செல்வபாரதி, கிருஷ்ணா, பிரம்மா, லட்சுமி ராமகிருஷ்ணன், கார்த்திக் ரிஷி, ரஞ்சித் ஜெயக்கொடி, நடிகர் வெங்கட் சுபா, ஜாஸ் சினிமாஸ் கண்ணன், தயாரிப்பாளர் லியோ விஷன் ராஜ்குமார், ஆல்பர்ட், நடிகர் இளையராஜா, வினோத், நடிகை நவீனா, இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, பாடலசிரியர் மதுரகவி, இயக்குனர் வேல்மதி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்.