‘பீப் சாங்’ விவகாரத்தில் மாட்டிக்கொண்டு டேமேஜ் ஆன அனிருத் அது சர்ச்சையோடு முடிந்து போயிருந்தால் கூட கவலைப்பட்டிருக்க மாட்டார். அதனால் கைவசம் இருந்த பட வாய்ப்புகளும், வர இருந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் போய் விட்டதே என்பது தான் அவருடைய பெருங்கவலை.
அதிலும் தன்னை வளர்த்து விட்ட தனுஷே கொடி படத்தில் தன்னை நீக்கிவிட்டு சந்தோஷ் நாராயணனை கமிட் செய்தது அனிருத் மனசில் பெரும் வலியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் இனி எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்கிற ஜாக்கிரதை தனத்தோடு இருப்பவர் தன்னைத் தேடி வந்த சிவகார்த்திகேயன் பட வாய்ப்பையும் மறுக்காமல் வாங்கி போட்டுக்கொண்டுள்ளார்.
அதோடு சமீபகாலமாக விறுவிறுவென்று புதுப்படங்களை இசையமைக்க கமிட் செய்து வந்த அனிருத் முன்னணி ஹீரோக்களைப் போல ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம்.
ஆமாம், இனி தேடி வருகிற படங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளாமல் வருஷத்துக்கு மூன்று படங்கள் மட்டுமே இசையமைப்பது என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மனசுக்கு திருப்தி தரும் வகையில் ரசிகர்களை ஈர்க்கும் பாடல்களை தரப்போகிறார். அதோடு இனி பீப் சாங் மாதிரியான எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்றும் இருக்கப் போகிறாராம்.
நல்ல புள்ளைக்கும் அழகும் அதுதானே..?