பொங்கலுக்கு களம் இறங்க தயாராகி வந்த விஜய்யின் ‘பைரவா’ படத்தின் காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டதையடுத்து நேற்று பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
விஜயா வாஹினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஜோடியாக இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘தெறி’ படத்துக்குப் பிறகு விஜய் நடிப்பில் ரிலீசாகும் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பும் கூட.
முன்னதாக படப்பிடிப்பு நிறைவு நாளில் நடிகர் விஜய் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி, இயக்குநர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார், டிட்டர் பிரவீன், கலை இயக்குநர் பிரபாகரன் தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன், முதன்மை நிர்வாகி குமரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். முதல் முறையாக இப்படத்தில் விஜய்யுடன் இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்ததையடுத்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
‘பைரவா’ படப்பிடிப்பு முடிந்ததையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறது.
இந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழா வருவதையொட்டி தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் விஜய் அதையடுத்து சில நாட்கள் ஓய்வெடுக்கிறார். பொங்கலுக்கு ‘பைரவா’ ரிலீசானதும் ஜனவரி இறுதி வாக்கில் அட்லி இயக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.