விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு அவருடைய புதுப்படங்களின் ஆடியோ, ட்ரெய்லர் போன்றவற்றின் கொண்டாட்ட நிகழ்வுகள் தான் எக்ஸ்ட்ரா கொண்டாட்டங்களாக இருக்கும்.
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பைரவா’ படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் இதுவரை அந்தப்படத்துக்கு பெரிதாக எந்த விழாவும் நடத்தப்படவில்லை.
இதற்கிடையே தான் வருகிற டிசம்பர் 17-ம் தேதி ‘பைரவா’ படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்தான தகவல் வெளியானது. இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள் ‘பைரவா’ இசை வெளியீட்டு விழாவை கொண்டாடித் தீர்த்து விட வேண்டுமென்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இப்போது அவர்களுக்கு ஏமாற்றம் தரும் தகவலாக ‘பைரவா’ ஆடியோ ரிலீஸ் பங்ஷன் எதுவும் நடைபெறாது என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
முதலில் ‘பைரவா’ பாடல்களை ஒரு பெரிய விழா எடுத்துத்தான் வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தாராம் விஜய். ஆனால் சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து இந்த கொண்டாட்ட விழா வேண்டாம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் சொல்லி விட்டாராம்.
முன்னதாக ஜெ., உடலுக்கு அஞ்சலி செலுத்த டிசம்பர் 6ம் தேதி ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்திருந்தார் விஜய். அப்போது முதல்வர் ஜெ.,வின் உடலைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
என்னதான் ‘தலைவா’ பட ரிலீசின் போது ஆளும் கட்சியினரால் பல இன்னல்களை சந்தித்தவராக இருந்தாலும் அரசியல் தாண்டி தனிப்பட்ட முறையில் ஜெ., மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார் விஜய். அதன் வெளிப்பாடு தான் அஞ்சலி நிகழ்வு நடந்த இடத்தில் அவர் அழுதது.
இந்த நேரத்தில் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொண்டாட்ட விழாவாக நடத்த விஜய் விரும்பவில்லை. ஆகவே சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராகியிருக்கும் ’பைரவா’ படத்தின் பாடல்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்யச் சொல்லியிருக்கிறார்.
விஜய்கிட்ட இருக்கிற பாசம் கூட கட்சிக்காரங்ககிட்ட இல்லாமப் போயிடுச்சே..?