‘கிடாரி’யின் வெற்றியைத் தொடர்ந்து ‘பலே வெள்ளையத் தேவா’ படத்தை தயாரித்து நடித்திருக்கிறார் இயக்குநர் சசிக்குமார்.
ஏற்கனவே படத்துக்குப் படம் ஜாதிப்பெருமையை தூக்கிப் பிடிக்கிறார் என்கிற கமெண்ட் சசிக்குமாரின் ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போதும் அவர் மீது வைக்கப்படும். இதில் டைட்டிலே அப்படி ஒரு சந்தேகத்தை எழுப்பியதால் அதுவே கேள்வியானது…
”ச்ச்சே… ச்ச்சே… கண்டிப்பா இதுல ஜாதிப்பெருமையெல்லாம் இருக்கவே இருக்காது. ‘வீர பாண்டியன் கட்டபொம்மன்’ படத்துல சிவாஜி சார் சொல்வார்ல… அதே டயலாக் தான். ஊர்ல கூட பசங்க ஒரு வேலையில இறங்கினா ”போடா மச்சான் பூந்து விளையாடிட்டு வா”ன்னு சொல்லி அனுப்புவாங்கள்ல… அந்த மாதிரி இந்தப்படத்துல கோவை சரளா அம்மா என்னைப் பார்த்து ”பலே வெள்ளையத் தேவா” ன்னு சொல்வாங்க. அதுக்காக இதை டைட்டிலா வெச்சிருக்கோம். மத்தபடி படம் முழுக்க முழுக்க காமெடிப்படமா இருக்கும். ஜாதிய அடையாளம் இருக்கவே இருக்காது.
படத்தில் இயக்குநராக அறிமுகமாகும் சோலை பிரகாஷ் இயக்குநர் பாலாவின் பட்டறையிலிருந்து வந்தவராம். குருவிடம் வேலை பார்த்தவராச்சே…. கண்டிப்பா விஷயமிருக்கும் என்கிற முழுமையான நம்பிக்கையில் கதையைக் கேட்டு நடித்திருக்கிறார் சசிக்குமார்.
படத்துல ஹீரோவா நான் வந்தாலும், கதைப்படி பார்த்தா நிஜமான ஹீரோ கோவை சரளா அம்மா தான். இந்தக் கதையை டைரக்டர் என்கிட்ட சொன்னப்ப என்னோட மனசுல ‘ஆச்சி’ மனோரமா தான் நெனைவுக்கு வந்தாங்க. இப்போ நம்ம கூட அவங்க இல்ல. அதுக்கடுத்து யாருன்னு யோசிச்சப்ப தான் ‘சின்ன ஆச்சி’ கோவை சரளா அம்மா கரெக்ட்டா இருப்பாங்கன்னு தோணுச்சு.
படத்துல அவங்க ஒரு செல்ஃபி பிரியர். அதனாலேயே அவங்க பேரை ‘செல்ஃபி காத்தாயி’ன்னு வெச்சிருக்கோம். அவங்க பண்ற அலப்பறைகள் ரொம்ப காமெடி எண்டர்டெயினிங்க்கா இருக்கும். ரொம்ப எனர்ஜியாகவும் இருக்கும் என்று சொல்லும் சசிக்குமார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒரு புதுமுகத்தை தேடுவதில் தான் சிரமப்பட்டாராம்.
அப்படி தேடியதில் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் குடும்ப வாரிசான பேத்தி தான்யா கிடைத்திருக்கிறார். வரவழைத்து போட்டோஷூட் எடுத்துப் பார்த்தால் கேரக்டருக்கு சூப்பராக செட்டாகியிருக்கிறார். இந்தப்படம் அவங்களோட சினிமா கேரியருக்கு நல்ல எண்ட்ரியா இருக்குமாம்.
படத்தின் போஸ்டர்களைப் பார்த்தால் மனோரமா நடித்த ‘பாட்டி சொல்லை தட்டாதே’ படம் போலத் தெரிகிறதே என்றால் ”அட கண்டிப்பா அதோட சாயல் ஒரு சதவீதம் கூட இதுல இருக்காது. நான் கோவை சரளா அம்மாவுக்கு பேரனே இல்லை” என்கிறார் சசி.
கிராமத்துல எல்லாம் இன்னும் டெக்னாலஜி போகலேன்ன்னு எல்லோரும் நெனைக்கிறாங்க. ஆனா அங்கேயும் செஃல்பியெல்லாம் எடுக்கிறாங்க. ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புன்னு அங்கேயும் டெக்னாலஜி முழுமையாக போக ஆரம்பிச்சிருக்கு. அதையும் இந்தப்படத்துல முழுசா காட்டியிருக்கோம் என்றார் சசி.
இந்தக் கதையை என்கிட்ட சொன்னப்ப என்னோட கேரக்டருக்குத்தான் ரொம்ப முக்கியத்துவம் இருந்துச்சு. இதுல எப்படி சசிக்குமார் நடிக்க ஒப்புக்கிட்டார்னு டைரக்டர்கிட்ட கேட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல என்னை நல்லா கவனிச்சுக்கிட்டார். சம்பளமெல்லாம் டான் டான்னு கேட்காமலேயே வீடு தேடி வந்துரும். அதுக்காகவே வெளிக்கம்பெனி படங்கள் கூட எனக்கு வேணாம் இனி தொடர்ந்து சசிக்குமாரோட கம்பெனி புரொடக்ஷன் எடுக்கிற படங்கள்லேயே நடிக்கிறேன் என்று சந்தோஷமாகக் கூறினார் கோவை சரளா.
வருகிற 23-ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது ”பலே வெள்ளையத் தேவா.”