சென்னை முதல் ராஜஸ்தான் வரை நெடுஞ்சாலை வழியாகப் போகும் கதையாக உருவாகும் படம் ‘பீரங்கிபுரம்’.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் நாயகனாக நடிக்கிறார்.
இவர் ‘நானு அவனுள்ள அவளு ‘கன்னடப் படத்துக்காக 2015 க்கான தேசிய விருது பெற்றவர். கன்னடத்தில் தேசிய விருது வாங்கினாலும் தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோவாகவேண்டுமென்பது தான் சஞ்சாரியின் ஆசை.
இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ எனப்படும் முதல் பார்வை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
‘பர்ஸ்ட் லுக்’கை நடிகர் ஸ்ரீகாந்தும் நடிகை நமீதாவும் வெளியிட்டனர்.
விழாவில் படத்தை இயக்கும் ஜான் ஜானி ஜனார்த்தனா பேசும் போது ” எனக்குச் சொந்த ஊர் திருத்தணி தான். நான் பல்வேறு பெரிய இயக்குநர்களின் படங்களைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டேன். சினிமா பற்றி பல்வேறு விதத்தில் ஆய்வுகள் செய்தேன். அப்படி உருவானதே இந்தக்கதை. மூத்த தலைமுறைக்கும் இளையதலைமுறைக்கும் இடையே நடக்கும் உளவியல் ரீதியான போர்தான் இக்கதை.
கதை சென்னை முதல் ராஜஸ்தான் வரை போகிறது. ‘பீரங்கிபுரம்’ ராஜஸ்தானில்என் கற்பனையில் உருவாகியுள்ள கிராமம். . முழுக்கமுழுக்க ராஜஸ்தானில் படமாகவுள்ள தமிழ்ப்படம் இதுவாகவே இருக்கும். படத்தில் ஒப்பனைக்கு முக்கியத்துவம் உண்டு. நடிப்பவர்கள் பலரும் நாடக நடிகர்கள்.பிற நடிகர்கள் அனைவருக்கும்.
முறையாகப் பயிற்சியளிக்கப்பட்டு நடிக்க வைக்கிறோம். உமா மகேஷ்வர் மேக்கப்பில் பேசப்படுவார். நாயகனின் தோற்றத்துக்கு ஐந்து மணி நேரம் மேக்கப் போட்டுள்ளார். சோதனை முயற்சியாக இப்படத்தை எடுக்க விரும்பினேன்.இது ஒரு முன்னுதாரண படமாக இருக்கும் வகையில் உழைத்து வருகிறோம். ”என்றார்.
நாயகனாக நடிக்கும் சஞ்சாரி விஜய் பேசும்போது, ” தமிழில் இது எனக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. நான் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. அதே நேரம் இப்போது தமிழ்நாட்டு இயக்குநர் பாரதிராஜா அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ஏனென்றால் தேசிய விருது தேர்வுக்குழுவின் தலைவராக அவர் இருந்த போதுதான் எனக்குத் தேசிய விருது கிடைத்தது. நான் அந்தப் படத்தில் மாற்றுப் பாலின பாத்திரத்தில் ஒரு திருநங்கையாக நடித்திருந்தேன்.
அதே போலவே இதுவும் பொன்னான வாய்ப்பு. நான் கமல், விக்ரம் போன்ற நட்சத்திரங்கள் நடித்த தமிழ்ப்படங்களிள் பெரிய ரசிகன். சிறுவயது முதல் அவர்கள் நடிப்பை ரசித்து வளர்ந்தவன். தேசிய விருது பெற்ற ‘நானு அவனுள்ள அவளு ‘ படம் போலவே இந்த’பீரங்கிபுரம்’ படமும் வித்தியாச முயற்சிதான் இதில் இளைஞன் தோற்றம், நடுத்தர வயது தோற்றம், முதிய தோற்றம். என மூன்று வகை தோற்றங்களில் வருகிறேன் .
இது ஒரு சைகாலஜிக்கல் த்ரில்லர் படம். இந்தப் படம் எனக்கு நல்ல அறிமுகமாக அமையும் .வேறு படவாய்ப்புகளையும் தேடித்தரும். இங்கே இந்த விழாவுக்கு ஸ்ரீகாந்த், நமீதா வந்திருக்கிறார்கள். இவ்விழா எனக்கு முக்கிய தருணம். ” என்றார்.