லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் இப்படத்தில் சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 7ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
சந்திப்பில் படத்தின் 25 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
திரையிடல் நிறைவடைந்ததும் பேசிய படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா சென்சாரில் ஏ சர்ட்டிபிகேட் கொடுப்பதால் ஏற்படும் சங்கடம் குறித்து வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது… ”இந்தப் படத்துக்காக கிட்டத்தட்ட 2 வருடங்கள் திரைக்கதை எழுத மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக எடுத்துக் கொண்டோம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுப்பது ரொம்பவே கஷ்டம். ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் இருந்தன.
நான் செல்வராகவன் சாரின் பெரிய ரசிகன். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது கட் அடித்து விட்டு போய் பார்த்த படம் ‘புதுப்பேட்டை’. அந்த படம் பார்த்த போதே நாங்கள் படம் எடுத்தால் அழகம் பெருமாள் அந்த படத்தில் இருக்க வேண்டுமென்று நினைத்தோம். சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது தான் இந்த படம்.
குரு சோமசுந்தரம் மைய கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். நிறைய இடங்களில் அலட்டல் இல்லாமலே சைலண்ட்டாக நடித்திருப்பார். முதல் படத்தை நானே எழுதி இயக்குவதில் எனக்கு உடன்பாடே இல்லை. ஹாலிவுட் படம் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உழைத்தோம்.
நாயகி சாந்தினி படத்தின் மிகப்பெரிய பலம். படத்துக்கு சென்சாரில் ‘A’ சான்றிதழ் கொடுப்பதற்கு பதில் ’18+’ என கொடுத்தால் நன்றாக இருக்கும். ‘A’ என்றால் அது வேறு மாதிரி படமாக இருக்குமோ? என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள் என்றார்.