இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் , கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராகவும், அவரது அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தவர். உறவினர் அசோக் குமார்.
இவர் கடன் கொடுத்த பிரபல பைனான்சியரான மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியன் மிரட்டியதன் காரணமாக நேற்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்த்திரையுலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விவகாரத்தில் கந்து வட்டிக் கும்பலை கண்டிக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ‘கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும், கந்துவட்டிக் காரர்கள் தமிழ் சினிமாவில் இருந்து ஓடிவிடுங்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அசோக்குமார் சாவுக்கு காரணமாக இருந்த கந்துவட்டி அன்புச் செழியனின் பெயரை அறிக்கையின் ஒரு இடத்தில் கூட விஷால் குறிப்பிடவில்லை.
அதைப் பார்த்ததும் காட்டமான இயக்குனர் சுசீந்திரன் ‘அன்புவின் பெயரைக் குறிப்பிடவே பயப்படுகிறீர்கள், நீங்கள் எப்படி தயாரிப்பாளர்களின் பிரச்னையை தீர்க்கப் போகிறீர்கள்’ என்று விஷாலை பகிரங்கமாக விமர்சித்தார். அதே கேள்வியை பலரும் கேட்கவே வேறு வழியில்லாமல் தனது திரைப்பட நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அன்புச் செழியனின் பெயரைக் குறிப்பிட்டு கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார் விஷால்.
அதில் ”அசோக்குமார் தற்கொலை விவாகரத்தில் அன்புச் செழியன் செய்தது மிகவும் தவறானதும், கண்டனத்துக்கும் உரியது. கடன் வாங்கிய நாங்கள் எங்கும் ஓடிப்போய் விடுவதில்லை. கடுமையாக உழைத்து எங்கள் கடன்களை அடைப்போம். இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் ட்விஸ்ட் செய்ய வேண்டாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விஷால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த நாள் முதல் ‘பாண்டிய நாடு’ உட்பட அவர் தயாரித்து வரும் பெரும்பாலான படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவர் மதுரை அன்புச் செழியன் என்பதும், அப்படிப்பட்டவர் மீது ஒரு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் என்ன நடவடிக்கை எடுப்பார்? என்பதையும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.