சின்னத்திரை இயக்குநர்கள் சங்க ஆண்டு மலர் மற்றும் வெப்சைட் துவக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், பெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் ஆண்டு சிறப்பு மலரை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட , தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக் கொண்டார். அதேபோல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சின்னத்திரை சங்கத்தின் வெப்சைட்டை பெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே செல்வமணி மற்றும் சிவன் ஸ்ரீநிவாசன் ஆகியோர் வெளியிட்டனர்.
விழாவில் இயக்குநர் விக்ரமன் பேசியதாவது : ”பத்தாண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் சீரியல் இயக்க வேண்டும் என்று பல பிரபல சேனல்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அப்ரோச் செய்தார்கள்.
அதற்கு நான் சொன்னேன் “கதை , திரைக்கதை , மற்றும் வசனத்தை மட்டும் நான் பண்ணுகின்றேன்” ஆனால் அதை நான் இயக்க மாட்டேன் என்று கூறி விட்டேன். இப்போது பெரிய திரையில் படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன். நாம் சீரியல் செய்தால் விமர்சனங்கள் வரும் என்று பார்த்தேன். ஒரு கட்டத்தில் சரி ஒரு சீரியல் எடுத்து பார்ப்போம் என்று முடிவெடுத்தேன்.
என்ன பயம் என்றால் பெரியதிரையில் சாதித்ததை சின்னத்திரையில் செய்ய முடிவில்லை என்று இயக்குநர்கள் பேசுவார்கள். அதனால் பெரியதிரையிலும் சாதித்து சின்னத்திரையிலும் சாதித்த ஒருவரிடம் சென்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் இது திரைப்படம் எடுக்கும் அளவிற்கு சுலபம் கிடையாது. ஒரு மாதத்தில் முப்பது நாள் என்றால் அந்த முப்பது நாளும் வேலை இருக்கும். உங்களுக்கு மட்டும் இல்லை உங்கள் முழு குழுவிற்கும் எல்லா நாளும் வேலை இருக்கும் என்று சொன்னார்.
அப்போது தான் புரிந்தது சின்னத்திரையில் இருக்கும் கஷ்டங்கள். அதனால் தான் நான் கதை, திரைக்கதை, வசனம் மட்டும் என்றால் எழுதுகிறேன், சீரியல் இயக்க மாட்டேன்” என்றார் விக்ரமன்.