சொம்பு இல்லாத ஆலமர பஞ்சாயத்துக்களைப் பார்ப்பது அரிது.
அப்படித்தான் ஆகி விட்டது சிறு பிரச்சனைக் கூட இல்லாமல் ஒரு தமிழ்ப்படம் வெளியாவதும்!
நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி வரும் ‘டோரா’ படத்தின் கதை என்னுடையது என்று சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார் ‘அலிபாபாவும் அற்புதக் காரும்’ என்ற படத்தின் கதையாசிரியரும், தயாரிப்பாளருமான சேட்டிலைட் ஸ்ரீதர் என்பவர்.
அவரின் இந்தப் புகாரால் டென்ஷன் ஆனது ‘டோரா’ படக்குழு. என்னடா இது படமே ரிலீசாகப்போகுது இந்த நேரத்துல இப்படியொரு பஞ்சாயத்தா? என்பது தான் அந்த டென்ஷனுக்கு காரணம்.
உடனடியாக எழுத்தாளர் சங்கத்தில் இந்தப் பஞ்சாயத்தை கொண்டு சென்றார் ‘டோரா’ இயக்குநர் தாஸ் ராமசாமி.
அவரையும் புகார் கூறிய சேட்டிலைட் ஸ்ரீதர் என்பவரையும் வரச்சொல்லி விசாரித்ததில் முடிவு டோரா இயக்குநருக்கு சாதகமாக வந்திருக்கிறது.
இருவரின் கதைகளையும் படித்துப் பார்த்த எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் இரண்டுமே வேறு வேறு கதைகள், கதாபாத்திரங்களும், கதைக்களமும், நிகழ்வுகளும், வடிவமைப்பும் வெவ்வேறாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.
இதன் மூலம் ‘டோரா’ படத்துக்கு ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் பண்றதுக்கு எவ்ளோ பிரச்சனை?