ஷாருக் கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர்.இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.
டிசம்பர் 21 தேதியான இன்று மிகுந்த ஆரவாரத்துடன் ஷாருக்கானின் ‘டங்கி’ வெளியானது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இணைந்திருக்கும் முதல் திரைப்படம் இது. இந்தியாவில் இதன் முதல் காட்சி அதிகாலை 5.55 மணிக்கு மும்பையின் அடையாளமாக திகழும் கெயிட்டி கேலக்ஸி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை ரசிகர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் கொண்டாடி எல்லையற்ற மகிழ்ச்சியை உறுதிப்படுத்தினர். இது தொடர்பாக இணையத்தில் ஷாருக் கானின் ரசிகர்கள் ஏராளமான காணொளிகளை பகிர்ந்து வருகிறார்கள். அதில் மேளதாளத்துடனும், வானவேடிக்கைகளுடனும் பட வெளியீட்டை அவர்கள் கொண்டாடுவதற்காக திரையரங்குகளில் ஒன்று கூடியதை காண முடிந்தது. மேலும் இந்த திரையரங்க வளாகத்தில் ஷாருக்கானின் பெரிய கட்அவுட் ஒன்றும் இருந்தது.