‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ படங்களின் தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் ”ஹர ஹர மகாதேவகி.”
ப்ளூ கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் தங்க ராஜ் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கியுள்ளார்.
படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
அடல்ட் காமெடிப்படமாக தயாராகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட நாயகன் கௌதம் கார்த்திக் பேசிய போது : ”எல்லோரும் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்திருப்பீர்கள். இந்த கதை பலருக்கு சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களை தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் நான் மிகவும் ரசித்து , சிரித்து கேட்டேன். பாடல்களை கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் ஹரஹர மகாதேவகியின் கதையை கூறினார். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது.
இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன். அனைவரும் கடினமாக உழைத்தோம். ஆனால் செட்டில் எல்லோரும் சிரித்துக்கொண்டே வேலைசெய்தது அருமையாக இருந்தது. என்னுடைய கடினமான காலகட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் என்னை அழைத்து இந்த படத்தை கொடுத்து உற்சாகத்தை, நம்பிக்கையும் தந்தார்.
இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதுமையான படமாக இருக்கும். நான் ஹரஹர மகாதேவகி டீமோடு மீண்டும் ஒரு படத்துக்காக இணைகிறேன். படத்தின் டைட்டிலை இயக்குனரே அறிவிப்பார். நான் இன்று காலை என்னுடைய ரசிகர்களை சந்தித்தேன். என்னை மகிழ்விக்கும் வகையில் 25 கிலோ கேக்கோடு வந்து என்னுடைய பிறந்த நாளை இரண்டு நாட்களுக்கு முன்பாக இன்றே கொண்டாடினார்கள். என்னுடைய ரசிகர்கள் எல்லோரும் தான் என் குடும்பம் என்றார் கௌதம் கார்த்திக்.
விழாவில் கௌதம் கார்த்திக் , நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் ஞானவேல் ராஜா , தயாரிப்பாளர் சங்க கௌரவ செயலாளர் கதிரேசன் , 2டி எண்டர்டெயின்மெண்ட் ராஜ சேகர் பாண்டியன் , தயாரிப்பாளர் தங்கராஜ் , இயக்குநர் சந்தோஷ் பி ஜெயகுமார், ஒளிப்பதிவாளர் செல்வகுமார் , இசையமைப்பாளர் பால முரளி பாலு , நடிகர்கள் ரவிமரியா , சதீஷ் , மயில்சாமி , ஆர்.கே.சுரேஷ் , தயாரிப்பாளர்கள் கே.ஆர் , அருள்பதி , ஆரா சினிமாஸ் மகேஷ் , இயக்குநர் ஆர்.கண்ணன் , கௌரவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.