‘இசைஞானி’ இளையராஜாவுக்கு தேசிய விருது! : இரட்டிப்பு கொண்டாட்டத்தில் சசிகுமார்

நேற்று காலை 63-வது தேசிய விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த பின்னணி இசைக்காக தாரை தப்பட்டை படத்துக்கு இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அப்படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சசிக்குமார் தனது சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

மகிழ்ச்சிப் பெருக்கின் பகிர்தலுக்காக இந்தக் கடிதம். எமது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இசையுலகின் ஆகச்சிறந்த பெருமகன் இளையராஜா அவர்களின் 1000-வது படமாக ‘தாரை தப்பட்டை’ அமைந்ததே எங்களுக்கான பெரிய விருது என மகிழ்ந்திருந்த வேளையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் கிடைத்திருப்பது இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. இசைஞானி ராஜா சாரை இந்திய தேசமே கொண்டாடும் சூழலில் ரசிகர்களோடு ரசிகர்களாக நாங்களும் இந்த மகிழ்வில் கலக்கிறோம்; இசைஞானியைக் கொண்டாடுகிறோம்.

தாரை தப்பட்டை படத்தின் இயக்குநரான பாலா அண்ணனை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அவரால் தான் அனைத்தும் சாத்தியமானது என்பது ஒருபோதும் மறுப்பதற்கில்லை.

‘பசங்க’, ‘தலைமுறைகள்’ வரிசையில் எங்களின் ‘தாரை தப்பட்டை’ படமும் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெரிய நம்பிக்கையாக அமைந்திருக்கிறது. இதற்காக உழைத்த ‘தாரை தப்பட்டை’ படக் குழுவினர் அனைவரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் பாசத்துக்குரிய சகோ சமுத்திரக்கனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய விருதுகளைக் குவித்திருக்கும் விசாரணை படக் குழுவினருக்கும், இறுதிச்சுற்று குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ் திரையுலகுக்கு கிடைத்திருக்கும் தேசிய அங்கீகாரங்களால் மகிழ்ந்திருக்கும் ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ilaiyaraaja 63rd National AwardNational AwardsTharai Thappattai
Comments (0)
Add Comment