‘அனுஷ்கா’ என்ற பெயரைக் கேட்டாலே அதிரும் தியேட்டராக மாறியிருந்தது சென்னை சத்யம் தியேட்டர்.
‘இஞ்சி இடுப்பழகி’ ஆடியோ பங்ஷனில் விழா நாயகர் மரகதமணி தான். என்றாலும் மேடையில் ஏறிய திரையுலக பிரபலங்களில் பெரும்பாலானோர் மரகதமணியை பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாயகி அனுஷ்காவையும் புகழ்ந்து தள்ளினார்கள். அவர்கள் வைத்த ஐஸ் மழையில் வெளியில் பெய்து கொண்டிருந்த நிஜ மழையே தோற்று விட்டது.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் “முன்பெல்லாம் நாங்க படம் எடுக்கிறப்போ ஹீரோயின் குண்டா இருந்தா தான் அவங்களை படத்துல கமிட் செய்வோம். அந்த மாதிரி ஹீரோயினைத் தான் ரசிகர்களுக்குப் பிடிக்கும். எம்.ஜி.ஆர் நடித்த நல்ல நேரம் படத்துல கே.ஆர்.விஜயா குண்டாதான் இருப்பாங்க. அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்போ எல்லா ஹீரோயின்களும் ஒல்லியாக ஆசைப்படுறாங்க, உடம்போட ஒட்டிக்கிற லெக்கின்ஸை போட்டுக்கிட்டு நடக்கிறாங்க… இந்தப் படத்துல அனுஷ்கா குண்டா இருந்தாலும் அந்தக் காலத்து ஹீரோயின்கள் மாதிரி ரொம்ப அழகா இருக்காங்க” என்று பேசிவிட்டு அமர்ந்தார்.
படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் பரத் ”எனக்கு நெஜத்துல அக்கா இல்லை. அனுஷ்கா அக்காவோட நடிக்கிறப்போ, பழகுறப்போ எனக்கு இப்படி ஒரு அக்கா கெடைக்க மாட்டாங்களான்னு ஏங்க வெச்சிட்டாங்க., அவங்களை நான் என்னோட சொந்த அக்காவாகவே பார்க்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்!
பின்னர் பேச வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் ”அனுஷ்கா என்னோட பொண்ணு மாதிரி. அவங்களை நான் என்னோட மகளாகவே சுவீகாரம் பண்ணிருக்கேன். என்னோட பொண்ணு அனுஷ்கா நடிச்சதுனால தான் இந்த விழாவுக்கே வந்தேன். இந்தப்படம் கமிட்டானப்போ எனக்கு போன் பண்ணி சார் இந்தமாதிரி ஒரு கதை கேட்டேன். ரொம்ப பிடிச்சிருந்தது. நடிக்கவான்னு கேட்டார். உடனே நடிம்மான்னு சொன்னேன்” என்றார்.
விழாவில் இயக்குனர் மோகன் ராஜா பேசும்போது ”கமலும், விக்ரமும் சேர்ந்த கலவை தான் அனுஷ்கா. தமிழ் திரையுலகில் படத்திற்கு ஏற்றாற் போல் உடம்பை குறைப்பார்கள் ஏற்றுவார்கள். அந்த வரிசையில் தற்போது அனுஷ்காவும் இணைந்திருக்கிறார்” என்றார்.
இப்படி வந்தவர்கள் எல்லோரும் அனுஷ்காவை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து தள்ள ரொம்பவே வெட்கப்பட்டுப் போனார் அனுஷ்கா.