விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ஒருவர் படத்தில் மத்திய அரசின் திட்டமான ஆதாருக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதாகவும், அதனால் படத்தை தடை செய்ய வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு படத்தை முழுமையாகப் பார்க்காமலேயே குற்றம் சாட்டுவது முறையல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
இதற்கிடையே நேற்று முதல் பாதி திரையிடல் முடிந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் மித்ரனிடம் இந்தப்படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான படமா? என்கிற கேள்வி எழுப்பப் பட்டது.
அதற்கு பதிலளித்த மித்ரன் ”இரும்புத்திரை திரைப்படம் டிஜிட்டல் இந்தியாவை குறை சொல்லும் படமாக இருக்காது. எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால்.
அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டுக் காண்பித்து அதைப்பற்றி கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்து வந்தார். அது இரும்புத்திரை படத்தில் நடந்துள்ளது. காரணம் இரும்புத்திரைக்கு படத்துக்கு இந்த முயற்சி சரியாக இருக்கும் என்பதால் தான்.
இந்தப்படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான படமில்லை. ஆதார் அட்டையால் ஏற்படும் ஆபத்தை பற்றி பேசும் படமும் அல்ல. டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும். என்ன தான் நாடு டிஜிட்டல் இந்தியாவை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும் என்று ஆட்சியாளர்கள் சொன்னாலும் இந்தியாவில் அதன் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய கட்டமைப்பு இன்னும் வரவில்லை. அதைப்பற்றித்தான் இந்தப்படம் பேசுகிறது” என்றார்.
சந்திப்பில் லைகா குழுமத்தை சேர்ந்த கருணா , அயுப் கான் , எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.