மாஸ் ஹீரோ அந்தஸ்த்துக்கு ஆசைப்படும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர் பேசுகிற பஞ்ச்சுகள் தான் மூலதனம்.
ஆனால் கதையே அடுத்தடுத்த படங்களின் கால்ஷீட்டுக்கு கியாரண்டி என்று நம்புகிற ஒரு சில ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் ஜெயம் ரவி.
ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்ட ஆசைப்படும் ஜெயம் ரவி வனமகன் படத்திலும் அப்படி ஒரு வித்தியாசத்தை தான் தன்னுடைய கேரக்டர் வழியாக காட்டுகிறாராம்.
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த வன மகன் படத்தில் ஆதிவாசியாக வருகிறார். அதனாலேயே படம் முழுக்க வாய் பேசாத ஹீரோவாக வருகிறார்.
சாதாரண கேரக்டரில் நடித்தாலோ சில இயக்குநர்கள் ஹீரோவை பெண்டெடுப்பார்கள். ஆதிவாசி என்றால் கேட்கவா வேண்டும்.
”இந்த வனமகன் படத்துக்காக டைரக்டர் விஜய் என்னை நன்றாக வேலை வாங்கினார். மேக்கப் இல்லாமல் ஆதிவாசியாக காட்டுப்பகுதிகளில் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்றது, மரம் விட்டு மரம் தாவியது என பல கஷ்டங்களை சந்தித்தேன். அந்த வகையில் கதை மேல் நம்பிக்கை வைத்து படத்துக்கு உழைத்த நல்ல கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பால் தான் இந்த படம் உருவாகியிருக்கிறது. நான் மட்டும் தான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சேன்னு சொன்னால் அது சுத்தப்பொய். மதன் கார்க்கி கூட அவருடைய மூளையை கசக்கி கஷ்டப்பட்டு தான் பாட்டு எழுதியிருக்கிறார். என் படத்தில் நடிச்சா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்கனு சொல்வாங்க. நிச்சயம் சாயிஷா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்க.
விஜய் மாதிரி சினிமாவை நேசிக்கும் ஒருவரால் தான் இந்த படத்தை எடுக்க முடியும். இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களை பற்றிய படம் தான் இது. சின்சியராக உழைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். போட்ட பணத்தை நிச்சயம் இந்த படம் திரும்ப எடுக்கும். அப்படி படம் ஒடலைனா சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் பண்ணி கொடுக்கிறேன் என்றவர் ஆன்லைன் பைரசி பற்றியும் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார். யார் வேணும்னாலும் இந்தப் படத்தை நெட்ல போட்டுக்கங்க, நீ உண்மையான தமிழனா இருந்தா நெட்ல போடாதே.” என்றார் நாயகன் ஜெயம் ரவி.