அது ஒரு நல்ல முயற்சி தான். ஆனால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் முன் வந்து கை கொடுத்தால் தானே அந்த திட்டம் வெற்றியடையும்.
சேரனின் மீது அன்பு வைத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் அமீர், சேரனின் குருநாதர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட வெகுசிலர் மட்டுமே சேரனின் அந்த புதிய திரைப்படங்களை ரசிகர்களின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று சேர்க்கும் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
வாழ்த்து தெரிவித்த கையோடு அவர்கள் மாஸ் ஹீரோக்களின் பின்னால் ஓடிவிட்டது தனிக்கதை.
தனி ஒரு மனிதனாக ”C2H” நிறுவனத்தை ஆரம்பித்து ஏதோ ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தவர் போல போஸ் கொடுத்த சேரனைப் பார்த்து எப்பேர்ப்பட்ட இயக்குநர்? இப்படியாகி விட்டாரே என்று கவலைப்பட்டவர்கள் தான் அதிகம்.
அந்தளவுக்கு தமிழ்சினிமாவின் ரசனையின் கேரண்டி இயக்குநராக வந்த சேரனின் தனது ”C2H” திட்டத்தின் முதல்படமாக தானே தயாரித்து இயக்கிய ”ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை” என்ற படத்தை தமிழகம் முழுவதும் டி.வி.டியில் வெளியிட்டார்.
தியேட்டரில் படம் ரிலீசானால் எப்படி விளம்பரம் கொடுப்பாரோ? அப்படியெல்லாம் தினசரி பேப்பர்களில் விளம்பரங்களும் கொடுத்துப் பார்த்தார். ஆனால் எதிர்பார்த்தபடி அவருடைய அந்த திட்டம் வெற்றியடையவில்லை.
இதனால் அவர் நிறுவனத்தோடு அந்த திட்டத்தில் இணைந்தவர்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி கேட்க ஆரம்பிக்க கோர்ட், கேஸ் என்று பஞ்சாயத்துகள் வரிசை கட்டின. அத்தோடு ‘C2H’ நிறுவனத்தை இழுத்து மூடிய சேரன் மீண்டும் பழைய சேரனாக களமிறங்கியிருக்கிறார்.
ஆமாம், ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறாராம் சேரன்.
வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தியேட்டர்களில் இந்தப்படம் ரிலீசாகிறது.
இதுகுறித்து சேரன் மேலும் கூறியதாவது : ”நான் டி.வி.டியில் படத்தை வெளியிட்டாலும் இன்னும் கூட நிறைய மக்கள் எனது படத்தை பார்க்கவில்லை. பார்த்தவர்களும் கூட இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்து வெச்சுக்கிட்டு ஏன் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணாம இருக்கீங்க? என்று கூட கேட்டார்கள்.
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய எனது விருப்பத்தை திரையரங்குகள் உரிமையாளர்கள் கூட்டமைப்பில் தெரிவித்தேன். அவர்களும் ஒத்துழைப்பு தருவதாக சொன்னதையடுத்து வருகிற ஏப்ரல் 14-ம் தேதி இப்படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறேன்” என்கிறார் சேரன்.
”ஒரு கை ஓசை”க்கு என்றைக்குமே பலனில்லை என்பதற்கு சேரன் ஒரு உதாரணம்.