‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்ததால் உற்சாகமாக வேலைகளைத் தொடங்கினார் டைரக்டர் அட்லீ.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் தவிர, மற்ற நட்சத்திரங்களிடமும் தேவையான தேதிகளை வாங்கிவிட்டுத்தான் இந்த மாதம் 1-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள்.
படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, ஜோதிகா என விஜய்க்கு மூன்று நாயகிகள்.
இதில் விஜய் படமென்பதால் திருமணம் நிச்சயமான சமந்தா கூட சரியாக தேதிகளை ஒதுக்கிக் கொடுத்து விட்டார். காஜல் அகர்வால் தேதிகளிலும் பிரச்சனையில்லை. ஜோதிகாவும் இவர்களைப் போலத்தான் எந்த குழப்பமும் இல்லாமல் முதலில் தேதிகளைக் கொடுத்தார்.
இப்போது படப்பிடிப்பு ஆரம்பித்து பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கும் நேரமாகப் பார்த்து திடீரென்று ‘விஜய் 61’ படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகியிருக்கிறார் ஜோ.
முதலில் ஓ.கே சொல்லிவிட்டு படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு ஜோ திடீரென்று விலக முழுக்க முழுக்க காரணம் டைரக்டர் அட்லீ தான் என்கிறார்கள் யூனிட்டில்.
”36 வயதினிலே”, ”மகளிர் மட்டும்” என்று தன் வயசுக்கேத்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் ஜோவுக்கு இந்தப் படத்தில் அட்லீ கொடுத்த கேரக்டரில் திருப்தியில்லையாம். சில மாற்றங்களைச் செய்து கொடுங்கள் என்று ஜோ கேட்டும் அட்லீ முடியவே முடியாது. உங்கள் கேரக்டர் இவ்வளவு தான் என்று முரண்டு பிடிக்க, இதற்கு மேல் யோசிக்க ஒன்றுமில்லை என்று கொடுத்த அட்வான்ஸ் பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டு விஜய் 61 யூனிட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார் ஜோ.
ஜோவின் இந்த திடீர் விலகல் அட்லீக்கு பெரும் மன வருத்தத்தை தந்தாலும், அவருக்கு மாற்றாக கிட்டத்தட்ட உசரத்திலும், எடையிலும் ஜோவைப் போலவே இருக்கும் நித்யாமேனனை கமிட் செய்து படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.