தமிழில் இருக்கும் ஒரு வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன அர்த்தம் வரும் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் முக்கால்வாசிப்பேர் டிக்ஷனரியை பயன்படுத்துவார்கள்.
ஆனால் கமல் தமிழில் எழுதுகிற வார்த்தைகளை தமிழில் புரிந்து கொள்ளவே ஒரு டிக்ஷனரி தேவைப்படும். அந்தளவுக்கு தனது எழுத்தில் துணிச்சலான கருத்துக்களோடு குழப்பத்தையும் சேர்த்தே பொது வெளியில் வைப்பார்.
அண்மைக்காலமாக தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள் மத்தியிலும், தனது ட்விட்டரிலும் காட்டமான கருத்துகளை தெரிவித்து வரும் கமல் நேற்று இரவு தமிழக அரசியல்வாதிகளின் தூக்கத்தை கக்கத்தில் வைத்துக் கொண்டு மோட்டு வளையைப் பார்த்தபடி இதுக்கு என்ன அர்த்தமாயிருக்கும்? என்று விடிய விடிய யோசிக்க விட்டு கதற விட்டு விட்டார்.
தனக்கே உரிய பாணியில் கமல் எழுதிய அந்த இரண்டு கவிதைகளுக்கும் அர்த்தம் கேட்டு சமூகவலைத்தளங்களில் பலபேர் அலைபாய்ந்ததைப் பார்க்க முடிந்தது.
அதற்கு காரணம் தமிழக அரசியல் குறித்த அவருடைய நிலைப்பாட்டை தெரிவிப்பது போல இருந்த புரியா கவிதைகள் தான்.
“அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்”
இப்படி கமல் போட்ட முதல் ட்வீட்டுக்கே பொருள் விளங்காமல் ஆளாளுக்கு சந்தேகத்தை கேட்டுக் கொண்டிருக்க
சரியாக அடுத்த முக்கால் மணி நேரத்தில் அடுத்து அவர் போட்ட ட்வீட் தான் தமிழக அரசியல்வாதிகளின் கதறல் ரகம்.
”இடித்துரைப்போம்
யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம்
மனதளவில் உம்போல்
யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
பேடா மூடா எனலாம்
அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழன் என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்”
அன்புடன்
நான்.
இப்படி போட்ட கமல் புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள். புரியாதவர்கள் நாளை ஆங்கிலப் பத்திரிகைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார்.
விடிந்தால் ”தமிழ் தலைவாஸ்” என்கிற கபடிக் குழுவுக்கு பிராண்ட் அம்பாசிடராக கமல் பொறுப்பேற்றிருக்கிறார் என்பது தான் அத்தனை ஆங்கில ஊடகங்களிலும் வந்த செய்தி.
ஆக விரைவில் நடைபெற இருக்கும் கபடி லீக்கில் ”தமிழ் தலைவாஸ்” அணியை விளம்பரப் படுத்துவதற்காகவே கமல் இப்படி ஒரு வேலையைச் செய்தாரோ என்கிற சந்தேகத்தோடு நிம்மதியும் அடைந்திருக்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்.