இதன் காரணமாக புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. போராட்டம் ஆரம்பித்து ஒரு மாதம் தாண்டியும் முடிவுக்கு வராததால் அதை எதிர்க்கும் விதமாக தனது மெர்க்குரி படத்தை ஏப்ரல் 13-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ்.
அவருடைய இந்த செயலுக்கு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடும் எதிர்ப்பைக் காட்டியது. மேலும் அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்குகிறோம் என்கிற திமிரில் கார்த்திக் சுப்புராஜ் இப்படி நடந்து கொள்கிறாரா? என்றும் அவரை சில தயாரிப்பாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
உடனே தனது நிலைப்பாட்டிலிருந்து மாறிய கார்த்திக் சுப்புராஜ் தமிழகத்தில் மட்டும் மெர்க்குரி படத்தை வெளியிட மாட்டேன். மற்ற மாநிலங்களில் வெளியிடுவேன் என்றார்.
அந்த வகையில் நேற்று ஏப்ரம் 3-ம் தேதி மெர்க்குரி படத்தை வெளியிட்டிருக்கிற கார்த்திக் சுப்புராஜ் அதுகுறித்து வேண்டுகோள் ஒன்றையும் தமிழ் ரசிகர்களிடம் வைத்திருக்கிறார்..
அதில் அவர் கூறியிருப்பதாவது, “எனது மெர்க்குரி படம் உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகியுள்ளது. ஆனால் என் மண்ணான தமிழகம் தவிர பிற இடங்களில் மட்டும் வெளியாகியிருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.
வேறு வழியில்லாமல் தான் மெர்க்குரி படத்தை மற்ற இடங்களில் இன்று (ஏப்ரம் 13) வெளியிடும் கட்டாயத்தில் இருந்தோம். அதனால் என் மண்ணைத் தவிர மற்ற இடங்களில் மெர்குரி ரிலீஸ் ஆகியுள்ளது. என் மண்ணில் என் படத்தை வெளியிட தகுந்த சூழ்நிலை அமையாதது மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
கூடிய விரைவில் எல்லாப் பிரச்னைகளும் சுமூகமாக முடிந்து படம் உங்கள் பார்வைக்கு வந்து விடும். அதுவரை தயவு செய்து மெர்க்குரி படத்தை யாரும் பைரஸி இணையதளங்களின் வழியாகப் பார்க்காதீர்கள். அன்பிற்குரிய தமிழ் ரசிகர்களுக்கு இது எனது பணிவான கோரிக்கை” என்று கூறியிருக்கிறார்.