விழாவின் முத்தாய்ப்பாக அனிமேஷனில் தயாராகி வரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடும் நடந்தது. ஏசி சண்முகம் மற்றும் சைதை துரைசாமி இசைத்தகட்டினை வெளியிட, நடிகர் பிரபுதேவா மற்றும் இயக்குனர் விஜய் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பேசும்போது படத்தை பற்றியும், எம்ஜிஆர் அவர்களைப் பற்றியும் பேசினர்.
இந்த படம் உருவாக மிக முக்கிய காரணம் இரண்டு பேர் தான். ஒன்று எம்ஜிஆர், அவர் தான் இப்படி ஒரு சிறப்பான தலைப்பை கொடுத்தவர். இன்னொருவர் எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ். அவர் கொடுத்த முழு சுதந்திரம் தான் இந்த படம் இந்த அளவுக்கு வர காரணம். எந்த தலையீடும் இல்லாமல் அவர் அளித்த சுதந்திரமும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. வைரமுத்து சாரின் வரிகளும், இமானின் இசையும் படத்துக்கு பெரிய பலம். படம் மிக சிறப்பாக வரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் இயக்குனர் அருள்மூர்த்தி.
இங்கு வந்திருக்கிற எல்லோருமே எம்ஜிஆர் ரசிகர்கள் தான். அவர் மீது உள்ள அன்பு, மரியாதை தான் இதற்கு முக்கிய காரணம். ட்ரெய்லர் பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. வைரமுத்து சார் பாடல்கள் எழுதியிருக்கிறார், அதை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. புரட்சித் தலைவருக்கான வரிகளை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் என்றார் இயக்குனர் விஜய்.
எம்ஜிஆரின் ஸ்டைல், அவருடைய ட்ரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் என் அம்மாவுடன் அவர் படத்தை ரசித்து பார்த்த நினைவுகள் வருகின்றன. என் அப்பா எம்ஜிஆருக்கு நான்கு படங்களில் நடனம் அமைத்திருக்கிறார். பள்ளி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்து மிகவும் மெய் மறந்தேன் என்றார் நடனப்புயல் பிரபுதேவா.
விழாவில் கொல்லங்குடி கருப்பாயி பாடல் பாடிய இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. ஆர்ஜே விஜய் இசை விழாவை தொகுத்து வழங்கினார்.6